Thursday 26 July 2012

மார்பம்






சாய்வு நாற்காலியில் பரப்பிக் கொண்டு எதிரே இருந்த மாமரத்தை வேடிக்கைப் பார்த்தேன். முன்பு நிறைய பறவைகள் வருவதும் போவதுமாய் கூடு கட்டுவதுமாய் ஒரே கொண்டாட்டமாய் இருக்கும் . இப்போது சுற்றிலும் அடுக்கப்பட்ட கான்கீரிட் அசுரர்களால் வருவது அதிகமாக குறைந்து விட்டது.
மெதுவாக என் கொங்கைகளை தடவிக் கொண்டேன்.ஒரு காலத்தில் இது என்னவெல்லாம் சந்தித்து இருக்கிறது. மகிழ்ச்சி , துயரம், வலி, பதட்டம், தவிப்பு என்று எண்ணற்ற உணர்வுகள். ராஜேஷ் பிறந்த போது உணவை வழங்கி அவனை உயிர்ப்பித்தது இந்த வெண்குருதி அல்லவா.   
முதலில் அவனுக்கு பால் புகட்ட மிகவும் சிரமமாக இருந்தது. அவனுக்கு குடிக்கத் தெரியாததால் மார்பினுள் பால் கட்டிக் கொள்ளும். வலி உயிர் போகும். குழந்தை பசியால் அழுவான். என்ன செய்வதென்று தெரியாமல் கைகளால் அழுத்தி அழுத்தி அந்த கெட்டிப் பகுதியை வெளியேற்றி பின் அவனுக்கு பால் ஊட்டுவேன். வலியின் உச்சத்தை சண்டையிட்டு வென்றுத் திரும்புவது போன்றது அது.
பயணங்களில் இன்னும் சிரமம். சுற்றிலும் இருக்கும் வல்லூறுகளின் பார்வை நம் மீதே பதிந்து இருக்கும். சற்று கூட நாகரீகமில்லாமல் குழந்தைக்கு பாலூட்டும் கொங்கைகளை காமப் பார்வையோடு அளவெடுக்கும் கும்பல்.
இரவு  ரயில் பயணத்தில் கீழ் படுக்கையில் இருந்து ராஜேஷுக்கு பால் கொடுக்க மிகவும் சிரமமாக இருக்கும். நிமிர முடியாது கூணல் முதுகில் சிறிது நேரம் அவனுக்கு பால் ஊட்டினாலே முதுகு வலி அதிகமாகி விடும்.
அவன் நிறைய பால் குடிக்க வேண்டுமெனில் நான் நிறைய சாப்பிட வேண்டும் . டாக்டர் கொடுத்த பால் பவுடர் பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி சாப்பிட வேண்டியதாயிற்று.
பயணங்களில் வியர்வை அப்பிய கொங்கைகளில் இருந்து பால் அருந்தியதால் குழந்தைக்கு இருமல் வந்து விடும். அதற்காக ஒவ்வொரு முறையும் பால் கொடுப்பதற்கு முன் என் மார்புகளை சுடு நீரில் சுத்தப்படுத்துவேன். காய்ச்சல் , சளி வந்து விடக்கூடாதென்று எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் , ஜீஸ் போன்றவற்றைக் கூட அவனுக்காகத் தவிர்த்தேன்.  
  பாரீனில் ப்ரெஸ்ட் பம்பர் மூலமாக மட்டும்தான் குழந்தைக்கு பால் ஊட்டுவார்களாம். அதில் என்ன சுக அனுபவம் இருக்கப் போகிறது. குழந்தை
பால் குடித்து முடித்ததும் உடம்பில் ஒரு வெற்றிடம் உண்டானதைப் போல் ஒரு உணர்வு ஏற்படும். அந்த இன்பமான தருணத்திற்கு இணை பம்பில் கிடைக்குமா?
பாலூட்ட வசதியாக இருக்குமென்று கடன் வாங்கிக் கூட முன்னால் பட்டன் வைத்த துணிகளை மட்டுமே வாங்கிக் குவித்தேன்.
ஆறு மாதங்கள் ஆன பிறகு ராஜேஷுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்த சமயம் , பாலூட்டூம்போது மெலிதாக பின் நாளாக நாளாக அழுத்தமாக கடிக்க ஆரம்பித்தான். வலி தாங்க இயலாது துடித்தாலும் அவன் வேறு உணவு எதையும் உண்ண மாட்டானே என்பதால் பொறுத்துக் கொண்டு ஊட்டுவேன்.


சடாலென கதவைத் திறந்து ராஜேஷ் நுழைந்தான்.  எரிச்சலுடன் என்னைப் பார்த்து “ அதான் ஆஸ்பத்திரிக்கு போகணும்னு சொன்னேனே . ஞாபகம் இல்லை. கிளம்பித் தொலை “ என்றான்.
“ மார்பில் வலி அதிகமாக இருக்குப்பா. அதனால்தான் அதை தடவிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கேன். “
“ அந்த சனியனால்தான் இவ்வளவு பிரச்னையும் . அது இல்லாம இருந்திருக்கலாம் . ச்சே. எனக்கு நிறைய செலவு வச்சிடுச்சு “
வசை பாடிக்கொண்டே கிளம்பினான்.
அவன் இந்த மார்புகளில் இருந்துதான் உயிர் வாழத் தொடங்கினான். விளையாட, தூங்க, ஓய்வு எடுக்க,சாப்பிட, குடிக்கத் தொடங்கினான். அவனது எண்ணற்ற முதல் செயல்கள்  இங்கிருந்துதான் ஆரம்பித்தன.
எட்டு மாதம் வரை அவன் நேசித்த அனுபவித்த அவனுக்கு உலகமாய் இருந்த என் மார்புகள் இன்று புற்று நோயால் தாக்கப்பட்டதால் அதிகம் வெறுக்கப்பட்டதாய் , தேவையற்றதாய் , வெட்டி எறியப்பட வேண்டியதாய் வன்மத்துடன் அவனால் அந்த மார்பகங்கள் பார்க்கப்படுவது எனக்கு துயரம் தருவதாக இருக்கிறது. ஒரு நோய் எப்படி பிரியமான ஒன்றை மிகவும் வெறுக்கத்தக்கதாய் மாற்றுகிறது என்று வியப்பாக இருக்கிறது. நோய் வந்ததால் இந்த மார்புகள் என்ன பாவம் செய்தன ? இப்படி ஏதிலியாய் இடது கைகளால் புறந்தள்ளப்பட்டது ?

சாய்வு நாற்காலியில் இருந்து மருத்துவமனைக்கு கிளம்பத் தொடங்கினேன்.

 
(மஹாஸ்வேதா தேவியின் கதைச் சுருக்கத்தை ஒருவரி மட்டும் படித்த பின் நான் செய்த முயற்சி )


Tuesday 24 July 2012


நடுத்தீர்ப்பு
------------

இந்திய வரைபடம் போல அவன் சாலையில் பரந்து கிடக்கிறான். அவனது மாணி உடைந்த முட்டையாய் சிதைந்து போய் இருந்தது.மூளை பாதி வெளியில் வந்து மீதி வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. மிக வேகமாக வந்த லாரி அவனை அடித்து விட்டுச் சென்றது. ஓட்டுனர் சிறிது தூரம் சென்று லாரியை நிறுத்தி விட்டு ஓடி விட்டான். சில நிமிடங்களுக்கு முன்தான் “ நான் தம்மடிக்க போறேன். நீ முன்னாடி போ “ என்று இவன் அவனிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. சில நிமிடங்கள் மொத்த வாழ்க்கையை எப்படி திசை திருப்ப முடிகிறது என்பதை இவனால் நம்ப முடியவில்லை. போலீசுக்கு போன் செய்தவனிடம் எதையும் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். நண்பர்கள் அவனைச் சுற்றி அழுது கொண்டிருந்தனர். தூரத்தில் நின்ற லாரியை நோக்கி நடந்தான் இவன். அவனோடு கழித்த பொழுதுகள் பயாஸ்கோப்பில் ஓடத் தொடங்கின.


அப்போது மாலை ஆறு மணி என்பதால் இருட்டத் தொடங்கி விட்டது. வழக்கம் போல இந்த மாட்சிலும் வெங்கட்தான் டாப் ஸ்கோரர்.  வெங்கட் முருகனை சைக்கிளில் முன்னால் உட்கார வைத்து மிதித்தபடி காஞ்சி ரோடிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தான் .

“ டேய். தளபதி எந்த தியேட்டர்ல போடறாங்கன்னு தெரியுமா ? ஃபர்ஸ்ட் ஷோவே பாக்கணும் என்றான்.

“ விபிசி இல்லை பாலசுப்ரமணியா வில் தான் இருக்கும் “ .

“ நாளைன்னிக்கு காந்தி ஜெயந்தி . அன்னைக்கு கீழ்னாத்தூர் டீம் கூட மாட்ச் வச்சிக்கலாம் . சொல்லிடு “

“சரி “

“ இங்கதானே அகதிங்க எல்லாம் இருக்குங்க  ?“

“ ஆமாம். ஏன் ? “

“ நல்ல குஜிலி எதாவது இருக்குமான்னு பாக்கத்தான் “.

ஜீக்கோ என்றொரு பல்லியால் இமைக்க முடியாதாம். எப்போதும் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்குமாம். வெங்கட்டுக்கும் பெண்களைக் கண்டால் அப்படித்தான். புலம் பெயர்ந்தோர் நிறைய பேர் அப்போது குடியேறிக் கொண்டிருந்த காலம். நேரே அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பங்க் கடையில் பாக்கெட் பெப்சியை வாங்கிச் சப்பத் தொடங்கினார்கள் . வெங்கட் 30,000 லென்ஸ்களுள்ள ஒரு தும்பியைப் போல அங்கிருப்பவர்களை பதிவு செய்யத் தொடங்கினான் .

“ முருகா. ஒன்னும் கிடைக்க மாட்டேங்குதே. எல்லாம் தாத்தாவும் பாட்டியுமா இருக்குங்க . ச்சே “

முருகனுக்கு பயமாக இருந்ததால் “ டேய். வாடா. டைமாச்சு “ என்றான்.

வேறு எந்த மரத்தையும் விட ஓக் மரங்களே மின்னல்களால் அதிகம் தாக்கப்படுகின்றன என்ற செய்தி படித்திருக்கிறான். இலங்கைத் தமிழரும் ஓக் மரம் போலத்தான். செல்வந்தர்களாக ஊரில் இருந்தவர்கள் இங்கு வந்து ஒரு சிறிய குடிசையில் கஷ்டப்படுகிறார்களே என்று வருத்தப்பட்டான்.

அப்போது சட்டை பாவாடை அணிந்து ஒரு 15 வயதுப் பெண் ஒருவள் ஒரு பெரியவரிடம் கையினால் சைகை செய்து கிளம்பினாள். கோவிலுக்கு போகிறேன் என்று சொன்னது போல் இருந்தது அது.

எந்தத் தூண்டிலில் மாட்டக் கூடாதோ அந்த மீன் மிகச் சரியாக அங்கேயே மாட்டிக் கொண்டது.

“ முருகா. உட்கார். கிளம்பலாம் “ என்றான்.

வேகமாக சீறிய சைக்கிள் இடுக்கிப் பிள்ளையார் கோவிலுக்கு முப்பதடி முன்பு நின்றது.

“ டேய். எதுக்குடா இங்க நிக்கற ? “

“ வெடக்கோழி ஒன்னு சிக்கி இருக்கு . விடுவனா ? “

“ டேய். அவங்க பாவம்டா. ஆயிரம் கஷ்டம் அனுபவிச்சி வந்திருக்காங்க  “

“ சும்மா ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாரு. வேலையை கெடுக்காதே “.

முருகனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வீடு இங்கிருந்து 5 கி மீ என்பதால் நடந்து போகவும் முடியாது. அமைதியாக ஒரு புளியமரத்தின் ஓரமாக இருந்த கல்திட்டில் போய் அமர்ந்து கொண்டான்.

அவள் ஜீலை மாதக் காற்றைப் போல வேகமாக வந்துக் கொண்டிருந்தாள். அருகில் நெருங்க நெருங்க முருகனுக்கு இதயம் 80 , 90 என்று அடிக்க ஆரம்பித்தது. வெங்கட் சடாலென அவளை நிறுத்த சடன் பிரேக் போட்ட பஸ் போல பதறினான். மெல்ல பூனையைப் போல் பின்வாங்கி ஒரு புளியமரத்தின் பின் சென்று மறைவாக சொட்டு நீர் பாசனம் செய்தான்.

அவளோ மிரண்டு போய் ஒரு கணம் செய்வதறியாது திகைத்துப் போனாள்.

“ உங்க பெயர் என்னங்க ? உங்க ஊர்ல இப்ப பிரச்னை இல்லையே ? எதாவது உதவி வேணும்னா சொல்லுங்க “ நான் ஈழத்துக்கு சப்போர்டான ஆள்தான் . நீங்க அழகா இருக்கீங்க . எங்க படிக்கிறீங்க? “ என்றான் வெங்கட் .

அந்த பக்கத்திலிருந்து எந்த சலனமும் இல்லை.

“ ஏம்மா. சிரிக்கறதுக்கு 17 தசையை அசைச்சாப் போதுமாம். கோபப்படுவதற்கு 43 தசையை அசைக்கணும். எதுக்கு கஷ்டப்படற ? “ என்றான்.

அவளோ எதுவும் பேசாமல் நகர முயற்சித்தாள். அவள் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கிப் பார்த்தவன் “ உன் பேரு அகிலாவா ? கும்முனுதான் இருக்க “ என்றான். 

“ எனக்கு 9 மில்லிகிராம் நீர்ச்சத்தும் 1 கிராம் புரோட்டினும் தர்றியா ? அதான் மாமன் முத்தா கேக்கறேன் “ என்று அசிங்கமாக சிரித்தான்.

ஆள் அரவமற்ற அந்த இடம் மௌனத்தினை பேசிக் கொண்டிருந்தது . அவள் அவனை எரித்து விடுவது போல் முறைத்து விருட்டென நகர மிதிபட்ட நாகம் போல சீற்றமடைந்தான் வெங்கட். வேகமாக அவளை நெருங்கி அவள் இரு மார்புகளையும் முதலை உணவை கவ்வுவது போல இறுக்கிப் பிசைந்தான். வலியால் துடித்தாள்.

வெங்கட் ஆறு அடி இரண்டு அங்குலம் . 65 கிலோ இருப்பான். அவளோ மிஞ்சிப் போனால் 40 கிலோ கூட இருக்க மாட்டாள்.
தட்டிய அவள் கைகளை பிடித்து முறித்தான். வலி தாளாமல் அவள் “ ஊ “ என்று சப்தமிட்டாள் .

“ ஊமை நாயே . என்ன திமிருடி உனக்கு. ராஜீவ் காந்திய கொன்னுட்டு இங்க எதுக்குடி வந்திருக்க ? “ என்றவன் அவள் பின்புறமாக கட்டிக் கொண்டு அவள் சட்டைக்குள் தன் கைகளை நுழைத்தான். அழுது கொண்டே இருந்தவள் அவன் விரல்களின் அழுத்தத்தால் “ ஆ! ஓ ! “ என்று கதறினாள். “ கிள்ளுனா வலிக்குதா ? “ என்று கிண்டலாகக் கேட்டான்.புல்டோசரில் சிக்கிக் கொண்ட மல்லிப் பூவானது அவள் நிலை.

எட்டிப் பார்த்து பதறிய முருகன் அவசரமாக ஓடி வந்து வெங்கட்டைப் பார்த்துக் கெஞ்ச ஆரம்பித்தான்.

“ டேய். ப்ளீஸ். வேணாம்டா . தயவு செய்து விட்டுடா “

“ அரை கிலோ தேன் எடுக்க 20 லட்சம் பூக்களிடம் தேனை எடுக்க வேண்டுமாம். இவ மட்டும் என்ன சுலபமா மடங்கிடுவாளா ? என்றான்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன் “ போடி நாயே உன்னால என் – மயிரைக் கூட தொட முடியாது “ என்றான்.

அணை உடைந்து கிளம்பியது நீர் அவள் கண்களில் இருந்து. அவசரமாக தன் வீடு இருக்கும் பகுதி நோக்கி ஓடினாள் உயிர் பிழைக்க ஓடும் மானைப் போல.

“ டேய் . ஏண்டா இப்படி பண்ண ?

“ மச்சி. சூப்பர்ரா. எப்படி இருந்திச்சி தெரியுமா ? அய்யோ. அவளை பார்த்தா அடுத்த தடவை அவளைப் பார்த்தா தூக்கிட்டு போக வேண்டியதுதான் “.


முருகன் லாரியை நெருங்கி பார்த்தான். பின் டயர் தனது உடலெங்கும் குருதியைப் பூசிக் கொண்டு நின்றது. இடுக்குப் பிள்ளையார் கோவிலை ஒட்டி நின்றிருந்த வண்டியை சற்றுத் தொலைவில் உள்ள கல்திட்டில் போய் அமர்ந்தான். போலீஸ் வந்ததும் அவர்களிடம் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான் முருகன.  
போலிஸ் A4   காகிதத்தில் எழுத ஆரம்பித்தனர்.

“ செப்டம்பர் 30 , 199 ----.செத்துப் பொனது யாரு உன் ஃப்ரெண்டா ?
 அவன் பேர் என்ன ?

“ ஃப்ரெண்டுதான் சார். அவன் பேரு வெங்கடேசன் “

“ லாரி பேரு என்ன போட்டுருக்கு பாரு ? “

“ அகிலான்னு போட்டுருக்கு சார்.