Monday 20 June 2011

குவியமில்லா ஒரு காட்சிப் பேழை


நுங்கம்பாக்கம் பகுதியின் நெற்றிபொட்டில் இருக்கும் அந்த சிறிய  பூங்கா ( சுதந்திர தின நாள் பூங்கா )  மிகப் பிரசித்தம். நத்தையின் ஓட்டினைப் போல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் நடை பயிற்சி , இரண்டாவதில் ஓட்டப் பயிற்சி , மூன்றாவதில்  குழந்தைகள் விளையாடவும் பெரியவர்கள் உடற்பயிற்சி எடுக்கவும் வடிவமைக்கப் பட்டிருக்கும். இலக்கிய ஆட்களும் அதிகம் வருவதால் விவாத அரங்கமாகவும் பயன்படுகிறது. கோட்டைமேடு கோபால் அடிக்கடி இங்கே வருவார். பழகுவதற்கு இனிமையான பந்தா இல்லாத மனிதர். நிறைய மரங்களால் சூழப்பட்டாலும் வடக்கு மூலையில் உள்ள ஆலமரம்தான் அனைவருக்கும் பிடித்த இடம். அதன்  விழுதுகளில் சிறார்கள் சிலந்தி மனிதனின் சாகசத்தை பயிற்சி எடுக்க முனைவார்கள். 

நான் என் பையனோடு மட்டை ஆட்டம் விளையாட அடிக்கடி வருவேன். இருக்கும் முக்கால் மணி நேரத்தில் ஊஞ்சல், நடை பயிற்சி , மட்டை ஆட்டம் என்று பிரித்துக் கொள்வேன். மூன்று அடுக்கு மனிதர்களும்  இங்கு தத்தம் சீருடையில் தனித்தனியே பிரிந்து தங்கள் பணியைச் செய்வர். ஒரு சனியன்று என் மனைவி , பையனோடு விளையாட வந்தேன். அவள் வேடிக்கை மட்டும்.  நாங்கள் விளையாடி சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அந்த அழுக்குச் சட்டையோடு    
கிழிந்த டிராயர் அணிந்த பையன் வந்தான். பக்கத்தில் வந்ததும் லேசான நாற்றம் அடித்தது. குளிக்கவில்லையோ என்னமோ. அந்தச் சிறுவன் தயங்கி தயங்கி வந்து  " சார். நானும் கூட விளையாடாலாமா ? " என்று கேட்டான்  . ஏற்கனவே  அவனைப் பார்த்து முகம் சுளித்த என் மனைவி அவசரமாக " இல்லை. இல்லை . நாங்க கிளம்பணும் " என்று தவிர்த்து கிளம்பினாள். சற்றே என் பார்வையை அவன் பக்கம் திருப்பினேன். ஏக்கத்தோடு நோக்கிய அவன் பார்வையை சமாளிக்க முடியாமல் கிளம்பினேன்.   

அதன் பிறகு அவ்வப்போது அவனை கவனிக்க ஆரம்பித்தேன் . இதற்கு முன்னரும் அவனை நான் பார்த்து  இருக்கலாம்.  ஞாபகம் இல்லை.  கவனித்த போது அவன் தனியாகவே வருகிறான். அவன் ஒவ்வொரு குழந்தையிடமும் தன்னையும் சேர்த்துக் கொள்ள கெஞ்சுகிறான். சிலர் தூரமாக நின்று விளையாட சிலர் இடது கையால் புறந் தள்ளுகிறார்கள். கூட்டுச் சேர்த்தலின் சந்தோஷத்தையும் நிராகரிப்பின்  வலியையும் அவன் ஒரே சீராக எடுத்துக் கொள்வதைப் பார்த்து சற்று வியந்தேன். அவன் வயது ஆறு (அ)  ஏழு இருக்கும். எங்கள் சிறு பிராயத்தில் தெருவில் ஆறு வகுப்பில் பத்து என்று நண்பர்கள் குவிந்து இருப்பர். எழுத்தாளர் மரியா அண்ணனோடு பேசுகையில் அவர் சொன்னது நினைவுக்கு வந்தது . இப்போதுள்ள குழந்தைகளுக்கு கணிணி தான் நண்பன். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் அதிகம் மனிதர்களோடு பழகுவதில்லை என்று தெரியவில்லை. மாறி வரும் சூழலா அல்லது பெற்றோரா தெரியவில்லை. எதுவானாலும் அது நல்லதற்கல்ல என்பது மட்டும் தெரிகிறது. 

ஒரு ஞாயிறன்று பையனோடு பூங்கா சென்றேன். சில நேர மட்டை ஆட்டத்திற்கு பின் அந்தப் பையன் மெல்ல வந்து நானும் வரட்டா என்று  கெஞ்ச  நான் என் பையனிடம் " நவீன். அண்ணனோடு  விளையாடு . நான் ரெண்டு ரவுண்டு ஓடி விட்டு வருகிறேன் " என்று சொல்லி ஓடத் துவங்கினேன். அந்தப் பையனிடம் " நீ கொஞ்சம் தோற்பது போல் நடி. இல்லாவிட்டால் ஒழுங்காக விளையாட மாட்டான் " என்று   சொல்லிவிட்டு கிளம்பினேன்.   முதலில் வெறுப்போடு விளையாடிய நவீன் பிறகு அந்தப் பையனின் சாதுர்யத்தால் கூச்சலோடு ஆடிக் களித்தான். சிறிது நேரம் கழித்து நான் அந்த பையனிடம் " இவனோடு விளையாட வேண்டும் என்றால் நாம் தோற்றாக  வேண்டும். நீ விட்டுக் கொடுத்து  விளையாடுவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது தம்பி. உன் பெயர் என்ன ?  உங்க வீடு எங்கே ? " என்று கேட்டேன். அதற்கு அவன் " மணி சார். வீடு இங்கதான் சார். பக்கத்துல " என்றான்.  நடையைக் கிளப்பினோம்.  

சில நாட்கள் கழித்து காலை ஐந்தரை ஆறு மணிக்கு குளக் கரை சாலை வழியாக வண்டியில் பூங்கா நோக்கி விரைந்தேன். மெல்லிய காற்று வருட முகத்தில் விழுந்த முடியை பின்னுக்கு தள்ளி சுற்றும் முற்றும்  பார்த்துக் கொண்டு போகையில் அந்த நடை பாதையில் ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்ல கடந்து செல்லும் போது  சற்றென்று வேகம் குறைத்து அந்த சிறுவன் முகத்தைப் பார்க்கையில் ஒரு நிமிடம் எரிமலையோடு பூகம்பம் தாக்கிய நகரைப் போல முற்றிலும் சிதைந்துப் போனேன்.  அந்தச் சிறுவன் மணி , அய்யோ. இயற்கை ஏன் தனது கொடூரத் திரையை எனக்கு விலக்கி காட்டுகிறது ?  துண்டு துண்டாக என்னை ஏன் உடைத்துப்  போடுகிறது ? 

பூங்காவிற்குள்  தோய்ந்த முகத்தோடு ஓடத் தொடங்கினேன். பீஷ்மரின் மீது வீசப்படும் அம்புகள் போல கேள்விகள் என்னைத் துளைக்க ஆரம்பித்தன.   

1 .  மழை பெய்யும் போது அவர்கள் எங்கே தூங்குவார்கள் ? 
2 . அவன் படிப்பானா ?  மாட்டானா ? 
3 .  அடுத்த வருடம் அவன் அப்பா அவனை ஒரு குடிசையிலாவது தங்க வைப்பாரா மாட்டாரா ?  
4 . அவனுக்கு உதவி செய்யலாமா ? 
5 .   சாப்பாட்டிற்கு என்ன செய்வான் ? 
  
குழப்பமாக ஓடி ஓய்வு எடுக்க அந்த ஆலமரத்திற்கு பக்கத்தில் உள்ள திட்டில் உட்கார்ந்தேன். அருகில் கவிஞர்கள் கத்திக்  கண்ணன் மற்றும் போ. ஐயப்பன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப்    பார்த்து " எப்படி இருக்கீங்க? " என்று கேட்க " உங்க கவிதைகளைப் போல ஒரே குழப்பமாக இருக்கேன். கொஞ்சம் என்னைப் போன்ற பாமரனுக்கு புரிகிறார் போல் எழுதுங்களேன். தெளிவாகிடுவோம்ல " என்றேன் . கண்ணன் "  ஏன்பா . இன்னைக்கு வேற யாரும் கிடைக்கவில்லையா ? " என்று கூற இன்னமும் என் குரங்கு மனம் வேறு எங்கும் தாவாமல் ஈட்டியாய் ஒரே இடத்தில் நிலை  கொண்டு மணியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.     

Sunday 15 May 2011

நேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி ?



பொதுவாக நமக்கு நேர்முகத் தேர்வு என்றாலே மிகுந்த பயம் உண்டாகும். ஆங்கிலத்தில் பத்து P 's என்பார்கள். அது
Poor Preparation Produces Poor Presentation
Poor Presentation Produces Poor Results .
நேர்முகத் தேர்விற்கு முன் முன்னேற்பாடு  மிக அவசியம். வெளிர் சட்டை , உறுத்தாத நறுமணம் , ஒழுங்காக சீவப்பட்ட தலை முடி போன்றவை முக்கியம் என்றாலும் இவை மட்டும் போதாது.வேறு சில காரணிகளும் உண்டு.
1 . உங்கள் உடல் மொழி மிக்க அவசியம். நம்பிக்கையான சீரான (சுறுசுறுப்பான) நடை, உறுதியான நிதானமான பேச்சு  வசியப்படுத்தும். கண்களை மட்டுமே பார்த்து பேச வேண்டும்.
2 . உங்களை நேர்முகத்திற்கு அழைத்திருக்கும் நிறுவனம் பற்றிய செய்திகள், என்ன தயாரிக்கின்றனர் , என்ன பின் புலம், முக்கியப் பொறுப்பு வகிப்போர், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நேர்முகத்தில் அவர்கள் நிறுவனம் பற்றி பெருமளவு
தெரிந்ததாக காட்டிக் கொண்டால் நம்மை கவனிப்பர்.
3 . அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் போட்டியாளர்கள் யார், சந்தையில் இவர்கள் பங்கு எவ்வளவு , இவர்களுடைய முக்கிய வாடிக்கையாளர்கள் யார் , இவர்கள் பொருட்களின் விலை / தரம் என்ன போன்றவை தெரிந்து இருந்தால் நல்லது.

4. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் செய்த சாதனைகள், முதன் முதலாய் பெற்ற பெரிய ஆர்டர், அதை பெறச்  செய்த உழைப்பு, எடுத்த ரிஸ்க்குகள், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்தது, சக பணியாளரை ஊக்குவித்தல் (நீங்கள் செய்திராவிட்டால் கூட செய்ததாகச் சொல்ல வேண்டும்) போன்றவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டும்.
5. எதற்காக எங்களிடம் வேலைக்கு வருகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் திருப்தி அடையும் வகையில் பதில் அளிக்க வேண்டும். பெரிய நிறுவனமான உங்களிடம் சேர்ந்தால் என் திறமை இன்னும் வலுப் பெறும். அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்  என்று சொல்வது பல பதில்களில் ஒன்று.
6. மேலும் நேர்முகத் தேர்வில் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்கும் போது பெரும்பாலும் ஏழை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்ததாகச் சொன்னால் அது சில மதிப்பெண்களைக் கூட்டும். பணி செய்யும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்து வருவதாக சொன்னால் மதிப்பெண்கள் குறையும்.
7. எவ்வளவு காலம் எங்களோடு பணி புரிவீர்கள் என்ற கேள்விக்கு காலம் முழுக்க என்று சொன்னால் நிச்சயம் கிடைக்காது. இவன் பொய் சொல்கிறான் என்று தெரிந்து விடும். அதனால் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு வருடம் இருப்பேன். பிடித்துப் போனால் இன்னும் பல வருடம் இருப்பேன் என்று சொன்னால் நம்புவார்கள்.
8. அதே போல நேர்முகத் தேர்வு நடத்துபவரிடம் நான் என் தனிப்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டே இங்கு  வந்துள்ளேன். நிறுவனம் வளரும்போது கட்டாயம் நானும் வளர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அது மதிப்பெண்களைக் கூட்டும்.
9. அதே போல அவர்கள் மேற்கோள்கள் (reference)  கேட்கும் போது நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணும் சக ஊழியர் தொலைபேசி எண்ணைத் தர வேண்டும். உயர் அதிகாரியோ அல்லது பிடிக்காதவர் எண்ணையோ தந்தால் அது நமக்கு ஆபத்தாக முடிந்து விடும். நம்மிடம் நன்றாகப் பழகுகின்ற வாடிக்கையாளர் எண்ணைக் கூடத் தரலாம். ஆனால் அவரிடம் முன்பே சொல்லி விட வேண்டும் நம்மைப் பற்றி நன்றாகச் சொல்ல.
10. பொதுவாக இண்டஸ்ட்ரீயில் நடக்கும் மாறுதல்கள் , முன்னேற்றங்கள் போன்ற விடயங்கள் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதனை நேர் முகத் தேர்வு நடக்கும் போது சொல்லவேண்டும். மேலும் பொது அறிவு (அரசியல், விளையாட்டு) போன்ற விடயங்களில் நம் அறிவை அவர்களுக்கு தெரியப் படுத்தவேண்டும். அவர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால் அவர் மாநிலத்தின் பெருமைகளை / நல்ல விடயங்களை  பேசினால் அவர் ஈர்க்கக் கூடும். 
பதட்டப் படாமல் கூலாக சென்று (வந்தால் மலை. இல்லையென்றால் ----- என்ற மனப் பாங்கோடு) மேற் கூறியவை செய்தால்  நேர்முகத் தேர்வில் வெற்றி நிச்சயம்.

Saturday 14 May 2011

ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெய்டபூரில் 9,900 MW  அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் அமைக்கப்படும்  Evolutionary Pressurized Reactors (EPR ) இதுவரை  உலகில் வேறு எங்கும் பயன்படுத்தியது  இல்லை ( not commissioned yet ) . அதனால் இது செயல்படும்போது  ஏற்படும்  பிரச்னைகளை இதை வடிவமைத்து தரும் AREVA விற்கே முழுமையாக தெரியாதபோதும், இந்த Reactorகளின்  நம்பகத் தன்மையும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கும்போது அரசு எப்படி ஒப்புக் கொண்டது என்பது ஆச்சர்யமாக உள்ளது .
ஒரு லட்சம் கோடி செலவு திட்டத்தை எந்த மாதிரி இடத்தில் தொடங்கப் போகிறார்கள் தெரியுமா? SEISMIC ZONE 3 நிலையில் உள்ள 1985 முதல் 2005  வரை  சுமார் 92 சிறிய நில நடுக்கங்களைக் கண்ட இடத்தில். அதிகபட்சமாக 1993ல் ரிக்டர் 6 .2 பதிவாகி உள்ளது.  நில நடுக்கங்களை சமாளிக்கும் திறன் கொண்ட அதிக பாதுகாப்பு வசதி கொண்ட அணு மின் நிலையங்கள் அமைத்த  ஜப்பானே புகுஷிமாவில் தடுமாறும்போது நாம் எந்த நம்பிக்கையில் இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவோம் அதுவும் நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் ?
மேலும் இந்தியா சொந்தமாகவே 18 PHWR களை (pressurised heavy water reactor) தயாரித்து அதை வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் PHWR முறையில் தயாரிக்காமல் புதிய முறையான EPR முறையில் தயாரிக்க வேண்டும் ? மேலும் 1 MWe க்கு EPR  முறையில் இருபது ௦ கோடி செலவாகும். ஆனால் PHWR முறையிலோ 1 MWeக்கு எட்டு கோடிதான் செலவாகும்.  எதற்கு அரசாங்கம் அதிக செலவில் ரிஸ்க் எடுக்கிறது ?
எனினும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளான கொங்கன் பசாவ் சமிதி மற்றும் ஜனஹிட் சேவா சமிதி முதலியன இத்திட்டத்தை எதிர்த்து போராடுகின்றன. வழக்கம்  போல மகாராஷ்டிரா முதல்வரும் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சரும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று சூளுரைத்துள்ளனர்.
மொத்தமுள்ள 2400 குடும்பங்களில்  வெறும் 154 குடும்பங்கள் மட்டுமே இதுவரை நிலத்தை ஒப்படைத்து விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு BNP பரிபாஸ் மற்றும் HSBC வங்கிகள் பெருமளவு நிதி தர சம்மதித்துள்ளன.  அந்த வங்கிகள் இந்த திட்டத்திற்கு பணம் கொடுக்க கூடாது என்று GREEN PEACE என்ற அமைப்பு  கையெழுத்து  இயக்கம் ஆரம்பித்துள்ளனர்.     நீங்களும் அதில் பங்கு பெறுங்கள்.
இதற்கு பதிலாக சூரிய ஒளி மற்றும் BIOMASS போன்ற ஆபத்தற்ற மின் உற்பத்தி திட்டங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் தரலாமே.
மிகுந்த ஆபத்தினை உடைய அணு மின் திட்டங்களை செயல்படுவதில் இந்த அரசு காட்டும் ஆர்வம் மக்கள் நலம் பற்றிய எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை என்பது வெளிப்படுத்துகிறது. 

Friday 29 April 2011

பாவப்பட்ட மனிதர்












இந்த பாவப்பட்ட மனிதரைக் காப்பாற்ற வக்கில்லாத துப்பில்லாத மத்திய 
மாநில அரசுகள் முறையே சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரையும் 2G இல் ஊழல் செய்தவர்களையும் காப்பாற்ற துடிப்பதைப் பார்க்கும்போது வாயில் இருந்து வெளி வரும் இரு விஷயங்களில் ஒன்றை பொது வெளி காரணமாக அடக்கி இன்னொன்றை வெளியிடுகிறேன். அடத் தூ தூ .







Wednesday 30 March 2011

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள்


சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கவும் பொது மக்களுக்கு உதவவும் சில முக்கிய மாநகர்களில் கொண்டு வரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில் திட்டம்.
சென்னையில் இரு பாதைகளில், வண்ணாரப்பேட்டைலிருந்து ப்ராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியே சென்னை விமான நிலையத்திற்கும் (23.1 கிமீ) மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை ( 22 கி மீ) இரண்டுமே தலா 18 நிலையங்கள் உள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் Rs .16000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதில் 41 % தொகையை மத்திய மாநில அரசுகளும் மீதியை Japan International Cooperation Agency (JICA) இடம் கடன் பெற்று செலவழிக்கப் போகின்றன.
இதில் வன்னாரப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை வரை தரைக்கு கீழேயும் பிறகு விமான நிலையம் வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை தரைக்கு கீழேயும் பிறகு பரங்கிமலை வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்க வழியை தரைக்கு சுமார் 12 மீ. க்கு கீழே வரும்படி அமைக்கப் போகிறார்கள். 4 கார் (1038 பிரயாணிகள்) மற்றும் சில வருடம் கழித்து 6 கார் (1580 பிரயாணிகள்) தொடர் வண்டிகள் இதில் பயன்படுத்தப்படும்.
இந்த தடங்களில் 2016 ஆம் ஆண்டு தினமும் 7,56 ,466 பேரும் 2026 ஆம் ஆண்டு தினமும் 10,64 ,048 பேர்களும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணசீட்டாக ஸ்மார்ட்கார்டும், தரைக்கு கீழ் உள்ள நிலையங்கள் முழுதும் குளிரூடப்பட்டவைகளாக இருக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளது . தொடர் வண்டிகள் சுமார் 80 கிமீ வேகத்தில் செல்லும். காலை ஐந்தில் இருந்து நள்ளிரவு 12 வரை இதனை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
முதல் 2 கிமீ வரை Rs .8 ல் ஆரம்பித்து அதிகபட்சமாக Rs .23 வரை பயணத் தொகையாக நிர்ணயம் செய்துள்ளனர். சுரங்க வழிகளில், பயணசீட்டில் விளம்பரங்கள் மற்றும் வண்டி நிறுத்துமிடம் மூலம் பணம் திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.
நாமும் ஒரு புதிய பயணத்திற்கு தயாராவோம்.

Monday 21 March 2011

மழை ஏன் பெய்கிறது


என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறேன் . வானாபுரம் செல்வதற்கு பேருந்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து வெறுத்துப் போய் ஒரு ஆட்டோவை நோக்கி கை நீட்டினேன்.
" எங்கே போகணும் சார் ? "
" வானாபுரம் பக்கத்தில அத்திபாடி "
" சார். பயங்கர மழை. பதினெட்டு கிலோமீட்டர். 300 ரூபா ஆவும் " .
யோசித்தேன். மிக முக்கியமான தேவைக்காக என் நண்பன் உமா மகேஸ்வரனிடம் ஐம்பதாயிரம் கடன் கேட்டு இருந்தேன். இன்று வாங்கிச் சென்று நாளை சென்னைக்கு போய் அந்த பணத்தைக் கட்டவேண்டும்.
" சரி. வா போகலாம்"
வண்டி மகிழ்ச்சியுடன் கிளம்பியது . தாமரை நகரை அடைந்தவுடன் நன்றாக உடை அணிந்த அந்த நபர் கை அசைத்தார். ஆட்டோ அருகில் போய் நின்றது.
" தண்டராம்பட்டு போகணும் . வருமா ? "
" இல்லை சார். நாங்க அத்திபாடி போறோம் . "
" சரி. நான் செட்டிபட்டில் இறங்கிக்கிறேன் "
ஆட்டோக்காரர் என்னிடம் திரும்பி " சார். உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே . 250 ரூபா தந்தா போதும் " என்று கேட்டார் .
நானோ " சரி சரி. அவர் வரட்டும் " என்றேன்.
அவசரமாய் உள்ளே நுழைந்து தன் இடத்தை ஆக்கிரமித்தார்.
என்னைப் பார்த்து " என்ன பண்றீங்க ?" என்று கேட்டார். சொன்னேன்.
தன் பெயர் சாத்தப்பனோ சாந்தப்பனோ ஏதோ சொன்னார். புரியவில்லை. அவரது பருத்த மேனியைப் பார்த்து நானாக சோத்தப்பர் என்று சூட்டினேன். சென்னையில் விற்பனைப் பிரிவில் பணிபுரிவதாகவும் இங்கு தண்டரம்பட்டுக்கு பக்கத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பணி நிமித்தம் செல்வதாகவும் சொன்னார். தலையை நன்றாக ஆடினேன். பெருமழை என்பதால் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி இருந்தது. சோத்தப்பர் உடனே " நம்மள விட கேரளாவில மூன்று மடங்கு அதிகமா மழை பெய்யும் . ஆனா தண்ணியே தேங்காது. பாருங்க. நாம ரோடு எல்லாம் வேஸ்ட். எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க " என்றார். சற்று தொலைவு சென்றவுடன் பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கியவுடன் " பாம்பே ரோடு எல்லாம் பளிங்கு மாதிரி இருக்கும். ஒரு பள்ளம் கூட இருக்காது. நம்ம ரோட்ட பாருங்க " என்றார். தலையை நன்றாக ஆடினேன். வேறு என்ன செய்ய ?
" உன் பெயர் என்ன ? " என்று ஆட்டோகாரரிடம் கேட்டார்.
" அண்ணாமலை "
" ஊரும் அண்ணாமலை. நீயும் அண்ணாமலையா ? வேற பேரே கிடைக்கலையா " என்று கூறி கெக்கே பிக்கே என சிரித்தார்.
தன் கையில் உள்ள புது மாடல் தொடுதிரை உள்ள அலைபேசியில் பேசலானார் " பிஸ்ஸா பாய் வருவான். வந்தா நானூறு ரூபாயும் ஒரு நாப்பது ரூபா டிப்சும் கொடுத்துடு " .
செட்டிபட்டு வந்தது. சோத்தப்பர் இறங்கினார். பெரும் பாரம் இறங்கியதைப் போல தோன்றியது.
ஆட்டோகாரர் அவரிடம் " சார். நூறு ரூபா கொடுங்க " என்றார் .
" என்ன அநியாயமா இருக்கு. சென்னையிலே எண்பது ரூபாதான். ரொம்ப கொள்ளை அடிக்காதே "
" சார். மழை. பத்து கிலோமீட்டர் . பார்த்து கொடுங்க "
" ம்ஹீம் . எண்பது ரூபாதான் என்று சொல்லியபடி காசை எடுத்து அவன் கையில் திணித்தார்.
ஆட்டோ சிறிது யோசனைக்கு பின் அத்திப்பாடி நோக்கிப் புறப்பட்டது. இருபது ருபாய் காப்பாற்றிய
மகிழ்ச்சியில் சோத்தப்பர் அடுத்த வண்டியை தேடலானார்.
சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு பள்ளிச் சிறுமிகள் சாலையில் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஒரு பாட்டி தன் புடவையில் மழையை தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அண்ணாமலை ஆட்டோவை அவர்கள் பக்கம் நிறுத்தி ஏறச் சொன்னார்
" இல்லை பரவாயில்ல " என்ற பாட்டியிடம் " காசு எதுவும் தர வேண்டாம் " என்று சொல்லி என்னைப் பார்த்து "சார் . கொஞ்சம் முன்னாடி அட்ஜஸ்ட் பண்ணிட்டு உட்காரீங்களா ? " என்றார் .
வெறுப்புடன் முன்னாடி வந்து உட்கார்தேன். மனதில் ஆயிரம் எண்ணங்கள் . உமா மகேஸ்வரன் பணத்தை தருவானோ மாட்டானோ என்று . அவன் கொஞ்சம் fraud தான். இருந்தாலும் நம்பிக்கைதான் வாழ்க்கை.
என்னிடம் பேசத் தொடங்கினார் அண்ணாமலை. தான் பன்னிரெண்டாவது வரை ( 980 மார்க்குகள் ) படித்து இருப்பதாகவும் தன் தந்தையார் இறந்ததனால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்றும் இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இல்லாததினால் படிக்காமல் ஆட்டோ ஒட்டி தன் குடும்பத்தைக் காப்பற்றி வருவதாகவும் சூழல் அவரை வேறு திசைக்கு திருப்பி விட்டதாகவும் சொன்னார்.
சிறுமிகளும் அந்த பாட்டியும் இறங்கிக் கொள்ள நான் அவரிடம் பேசத் தொடங்கினேன்.
" பாவம் சார் இந்த குழந்தைங்க . இவங்களாவது படிச்சி பெரிய ஆளாகி தன் தலைமுறையை வளர்த்து விடட்டும் . சூழல் எதுவும் கெடுத்திடக் கூடாது என்றார். "
முன் பின் தெரியாத அந்த குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் பாட்டி மழையில் நனையக் கூடாது நினைக்கும் அவரை மரியாதையோடு பார்த்தேன்.
சோத்தப்பர் போன்று குவிந்துக் கிடக்கும் மாநகர கூட்டத்தோடு தினமும் பழகும் எனக்கு இந்த சிறிய ஊரின் பெரிய மனிதர் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.
அத்திபாடி வந்தது.
இறங்கி அவரிடம் நானூறு ருபாய் கொடுத்தேன்.
" சார் " என்றார்.
" பரவாயில்லை . வச்சிக்கோங்க " .
" தேங்க்ஸ் சார் "
மழை பெய்துக் கொண்டே இருந்தது.
ஏன் பெய்கிறது எதற்கு பெய்கிறது என்ற காரணம் தெரிந்தது.

வசை


எங்களுடைய உயர் அதிகாரி எங்களை பாலக்காடிற்கு போகச் சொல்லி விட்டார். அங்கே தோனி (தோனி என்றால் உங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) என்றொரு இடம். அதற்கு பக்கத்தில் இருக்கும் ரயில்வே டிவிசன் ஆபீசுக்கு செல்ல வேண்டும். என்னோடு கிஷோரும் சாந்தமூர்த்தியும் வருகிறார்கள். ஞாயிறு மதியம் கோவை எக்ஸ்ப்ரஸில் கிளம்பி கோவை சென்று அங்கு ரூம் போட்டு பின்னர் மறுநாள் காலை பாலக்காடு செல்லலாம் என்று திட்டம்.
கம்பெனி செலவு என்பதால் நாங்கள் எப்போதும் AC இல்தான் செல்வது வழக்கம். எங்கள் சொந்த காரியத்திற்கு சென்றால் sleeper (அ) unreserved . சென்னை சென்ட்ரலில் குழுமி இருந்த மனிதக் கூட்டத்தில் எவரிடமும் இடிபடாமல் இருக்க வளைந்து நெளிந்து பறந்து எங்கள் கோச்சை அடைந்தோம். எப்போதும் சார்டைப் பார்க்கையில் நம்மோடு இன்று யாரெல்லாம் பயணம் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம். பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் நம் பக்கத்து சீட் என்றால் அந்த பயணமே முழுமை அடைந்ததாக அர்த்தம். இந்த முறை சில தாத்தாக்களும் பாட்டிகளும் எங்களோடு பயணிப்பதால் நாங்கள் வாழ்க்கையே வெறுத்துப் போனது உங்களுக்கு பேரின்பத்தை அளிக்கும்.
மெல்லிய சீரான குளிர் காற்று என் உடலை புணரத் தொடங்கியது. ஆசனத்தில் சாய்ந்தபடி ஹெட்போனில் காற்றுக்குள்ளே வாசம் போல எனக்குள் நீ என்ற யுவனின் குரலைக் கேட்டபடி வெளியே பார்த்தேன். பனை மரங்கள், நீர்குட்டைகள் என்று அனைவருக்கும் எங்கள் கண்களால் செய்தி பரிமாறிக்கொண்டு சென்றோம். பரிசோதகர் எங்களிடம் வந்து சோதனை இட்டு பின்னர் எதாவது இருக்கை காலியாக உள்ளதா ஏதேனும் சம்பாதிக்க முடியுமா என்று தீவிரமாக சார்டையே வைத்து ஏதோ சமன்பாடு செய்து கொண்டு இருந்தார்.
காட்பாடி முன்னரும் பின்னரும் ஏகப்பட்ட தென்னை மரங்கள். ஒரு வேளை இந்த ஊர் வெயிலூராக இருப்பதற்கு இது காரணமோ என்று கிஷோர் கேட்டான். எதிரே இருந்த தாத்தாவை வெறுப்புடன் பார்த்தபடி எனக்கு தெரியாது என்று சலிப்புடன் சொன்னேன். என் கவலை எனக்கு. என்னிடம் எதுவும் தேறாது என்று சாந்தமூர்த்தியிடம் போய் பாலாறு வற்றியதற்கு காரணம் ஆம்பூர் சாயக் கழிவு பட்டறைகளா, பாலக்காடில் ஒரு கோட்டை இருக்கிறதாமே அது நம் செஞ்சி கோட்டை போல் இருக்குமா என்றெல்லாம் ரகுவிடம் கேட்க, சாந்தமூர்த்தி விஞ்ஞானி ஆக வேண்டிய பிள்ளையை விற்பனைப் பிரிவுக்கு மாற்றி இழுத்து விட்டோமோ என்ற கவலையில் ஆழ்ந்தான். சேலம் வந்தவுடன் அந்த பெரியவர்கள் இறங்கிக் கொள்ள நாங்கள் சற்று நிம்மதி அடைந்தோம்.
சிறிது நேரத்தில் போலியோ தாக்கப்பட்டு நடக்க முடியாத மிகவும் அழுக்காக பக்கத்தில் வந்தால் நாற்றமடிக்கும் அந்தச் சிறுவன் ஒரு அழுக்குத் துணியால் தரையை துடைத்துக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு குடலைப் புரட்டியது. ஓரமாக கர்சீப்பால் என் மூக்கைப் பொத்திக் கொண்டு அவனைப் பார்ப்பதை தவிர்த்தேன். சாந்தமூர்த்தி அவனுக்கு ஐந்து ருபாய் கொடுத்தான். நான் அவனிடம் இது அதிகம் என்பது போல பார்த்தேன்.
அவன் இப்போது என்னைப் பார்த்து நான் கடவுள் படத்தில் பூஜா ஆர்யாவிடம் மரண பிச்சை கேட்பது போல காசு காசு என்று கெஞ்சினான். கொடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கும் போது உள்ளே நுழைந்த அந்த பரிசோதகர் ஆவேசமாக அவனைப் பார்த்து "நாயே. உன்னை இங்க எல்லாம் வரகூடாதுன்னு சொல்லியும் திமிரெடுத்து இங்க வரியா? பரதேசி. கொன்னுடுவேன். ஓடிப் போய்டு" என்று கத்தி விட்டு என்னைப் பார்த்து "பாருங்க சார். இந்த நாய்க்கு எதாவது வேணும்னா second seating / unreserved போலாம்ல. சொகுசா AC ரூமுக்கு வந்து பிச்சை எடுக்குது பன்னாடை. அவங்கம்மா இந்த சனியன ரயிலுக்கு பெத்துட்டு ஜாலியா எவன்கூடவோ இருக்கா. இது நம்ம தாலிய அறுக்குது" என்று சகட்டு மேனியில் கெட்ட வார்த்தைகளால் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு திட்டினார். அவரது இன்றைய இலக்கு தவறி விட்டது போலும்.
AC ரூமுக்கு வந்து பிச்சை எடுத்த அந்த மாபெரும் குற்றத்திற்காக தன் சுயமரியாதை இழந்து வசைச் சொற்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் நொந்து சென்றான் அவன். ஈரோடு தாண்டியவுடன் ஒருவன் கையில் DVD களை அடுக்கியபடி "சார். புது படம். புது படம்" என்று கூவியபடி என்னிடம் நீட்டினான். தமிழ் சினிமாக்களை இப்போது எந்த வடிவிலும் பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். கிஷோரும் சாந்தமூர்த்தியும் தலா ஒரு DVD வாங்கிக் கொண்டனர். அந்த நபர் "வணக்கம் சார்" என்றபடி பரிசோதகரிடம் கொஞ்சத் தொடங்கினான்.
சிறு உரையாடலுக்குப் பிறகு "சரி சார். நான் வரேன். இத வச்சிகோங்க" என்றபடி ஒரு புது படத்தின் DVD யை கொடுக்க அவர் தலையைக் குனிந்தபடி யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்டார்.
சில நொடித்துளிகள் கழித்து வெளியே வந்தேன். அங்கே அந்த சிறுவன் உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் முகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் விசும்பும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் முதுகை தட்டி "தம்பி" என்றேன். அவன் திடுக்கிட்டு திரும்பி தன் கண்ணீரை துடைத்தான் . "இந்தப்பா வச்சிக்கோ" என்று ஒரு இருபது ருபாய் நோட்டை அவனிடம் கொடுத்தேன். அவன் வாங்கும்போது அந்த நோட்டில் காந்தியின் கண்ணில் ஒரு சொட்டு நீர் இருந்தது .

Sunday 20 March 2011

புவி வெப்பமாதலின் விளைவு


சென்னை எண்ணூர் பகுதியில் மெல்ல மெல்ல கடல் அரித்துக் கொண்டே வருகிறது . நான் கடந்த 8 வருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட 20 முதல் 30 mtr வரை நர்ருக்குள் வந்து இருக்கிறது. பெரிய பாறைகள் போடப்பட்டும் மெல்ல நுழைவதை தடுக்க முடியவில்லை. புவி வெப்பமாதலின் விளைவுகளை இங்கு பார்க்க முடிகிறது.  .





இப்படியே மெல்ல மெல்ல ஊருக்குள் வருவதால் இந்த பகுதிகளில் கரையோரத்தில் குடிசைகளில் வாழும்  விளிம்பு நிலை மீனவர்கள்  வேறு புலம் தேடி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். 

எனக்கு பிடித்த இசை


ராம்ஸ்டீன் - Industrial metal genre - German - இவர்களுடைய பாடல்களை பெரிய theatre ஆடியோ சிஸ்டமில் கேட்டால் கட்டாயம் காது ஜவ்வு கிழிவது நிச்சயம். ஆனால் சில பாடல்கள் அற்புதமாக நல்ல கருத்துக்களை சொல்லும் .

பிரபலம் ஆவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய துடிப்பவர்களையும் , வணிகத்திற்காக கேவலமான விஷயங்களுக்கு முன்னுரிமை தரும் ஊடகங்களையும்
 பொது மக்களையும் இந்த பாடல் விவரிக்கிறது.


http://www.youtube.com/watch?v=f4K6ZxDwi34

இந்த பாடல் " புதிய முகம் " என்ற மலையாள படத்தில் வரும் பாடல். பிச்ச வெச்ச என்றால் அடி எடுத்து நடக்க ஆரம்பித்த நாள் முதல் என்று அர்த்தம். மலையாள கலாச்சாரத்தின் குறியீடாக இந்த பாடலை எண்ணத் தோன்றுகிறது.


http://www.youtube.com/watch?v=GS-GzjQN8f0





இசையில் அதுவும் மூங்கில் சார்ந்தது என்றால் (bamboo music ) சீன , ஜப்பானிய இசையை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் கிடையாது. அதுவும் நீங்கள் மிகுந்த மனச்சோர்வுடன் இருக்கும் போது இந்த இசையை கேட்டால் இதமாக வருடும்
தென்றலைப் போல .
மயிலிறகைப் போல.

ஜப்பானிய நாட்டுப்புற இசையின் ஒரு வகையான சகுரா என்பது வேனிற் பருவத்தை வரவேற்கும் இசை. செர்ரி
 மலர்வதைக் குறிப்பது.


http://www.youtube.com/watch?v=6DOg2Rpg0-4&playnext=1&list=PL8FB8E80DE51AD48A


சாரு புகழ்கிறாரே என்று ரேகே இசையினை கேட்டேன். நன்றாக இருக்கிறது. லத்தின் இசையினை ஒத்த தாகவே உள்ளது.


http://www.youtube.com/watch?v=_ZdYPPnvc8I&feature=related

Friday 11 March 2011

 அசத்தும் அன்ட்ரோயிட் அலைபேசிகள் - அடுத்த தலைமுறைக்கு


அலைபேசி என்பது பேசுவதற்கு மட்டும்தான் என்று எண்ணுபவன் என் நண்பன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அலைபேசியை வைத்து பேசுவது மட்டுமில்லாமல் மற்ற பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் .

Android என்பது அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுப்பு. ஜாவாவால் ப்ரோக்ராம் செய்யப்பட்டு இருக்கும். இது நோக்கியா தவிர பிற நிறுவன அலைபேசிகளில் உள்ளது. GPRS , 3G , WIFI மூலம் இதனை இணைத்து உபயோகப் படுத்தலாம்.
இதில் உள்ள ஆயிரக்கணக்கான பயன்பாடுகளில் (application) சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* முன்பின் தெரியாத இடத்திற்கு சென்றால் கூகிள் வரைபடம் மூலமாக நாம் போக வேண்டிய இடத்தை கண்டு பிடிக்கலாம்.
* நண்பர்களை குழுவில் இணைத்துக் கொண்டால் அவர் இருக்குமிடத்தைக் காணலாம். நண்பர் அடையாரில் இருந்து கொண்டு "பத்து நிமிடத்தில் நுங்கம்பாக்கம் வருகிறேன்" என்று பொய் சொன்னால் மாட்டுவது உறுதி. கணவர்களுக்கு இது மிகப் பெரிய தலைவலியை உருவாக்கும். யாராவது கடத்தப்பட்டால் ( அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யாவிட்டால்) கூட கண்டு பிடித்துவிடலாம்.
* காரோடு இணைத்துக் கொண்டால் கவலையே இல்லை. அது இப்போது எங்கு இருக்கிறது, யார் திருடி எங்கே வைத்துள்ளார், சாலையில் நாம் போகும் இடத்தை வழி காட்டிச் செல்லுதல், தரிப்பிடம் குறித்த கால இயக்கி (parking timer ) , தூரம் காட்டி (Distance indicator ) இன்னும் பல . ஆனால் மகிழுந்தில் (கார்) WIFI இணைப்பு இருக்கவேண்டும்.
* அலைபேசி தொலைந்து போகும் என்ற கவலை வேண்டாம். புதிய தகவல் அட்டையை (sim card ) மாட்டும்போது நம் அலைபேசியின் இருப்பிடம் அறிந்து கொள்ளலாம் மற்றும் தானாக பூட்டிக் கொள்ளும் வசதி. மேலும் ஒலி எழுப்பி திருடியவரை பயமுறுத்தலாம். அப்படியும் கிடைக்காவிட்டால் தொலை இயக்கி மூலம் நம் தனிப்பட்ட தகவல்களை அழித்து விடலாம். என்ன கொஞ்சம் செலவாகும் .
* இன்னொரு பயன்பாட்டைப் பயன்படுத்தி நம் அலைபேசியை கொண்டு ஆகாயத்தை நோக்கி நீட்டினால் விண்கலங்கள் எங்கெங்கு சுற்றி கொண்டு இருக்கின்றன என்பது தெரிந்து விடும். மேலும் ஒரு வாரத்திற்கான வானிலை அறிக்கை போன்றவையும் பார்க்கலாம்.

* இரத்த அழுத்தம், நம் உடலின் வெப்ப நிலை , இதயத் துடிப்பு போன்றவற்றையும் சோதித்துக் கொள்ளலாம். மாதிரி உடற்பயிற்சி முறைகளைப் பார்த்து நாமும் அது போல செய்யலாம்.
* பணத்தை திட்டமிடுதல் ( money manager ) , வரவு செலவு விவரம் ( வார மற்றும் மாத ), செலுத்த வேண்டிய பில் விவரங்கள், நேரம் திட்டமிடுதல் ( சமைக்க , உடற்பயிற்சி , சாப்பிடும் மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கு ஆகும் நேரம் தெரிந்து கொள்ள) , மற்றும் facebook , twitter போன்ற சமூக தளங்களையும் இணைத்து கொள்ளலாம்.

* ATM களை கண்டுபிடிக்கலாம். குறுஞ் செய்தி, புகைப்படங்கள் மற்றும் மின் அஞ்சல்களை பூட்டி கடவுச் சொல் கொண்டு திறக்கும்படியாகச் செய்யலாம். மொழி பெயர்ப்பு வசதியும் உண்டு. (இந்திய மொழிகளில் இன்னும் வந்ததா என்று தெரியவில்லை) .

* குழந்தைகளுக்கு தேவையான மருத்துவக் குறிப்புகள், உணவுக் குறிப்புகள், பெண்கள் தங்கள் மாத விலக்கு தேதியை பதிவு செய்தால் அவர்கள் எந்தெந்த நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் போன்ற ஆலோசனைகளும் உள்ளது.

* உலகில் உள்ள தமிழ் வானொலிகள், 210000 உணவகங்களின் தொகுப்பு, இசை, சினிமா என்று அனைத்துமே உங்கள் கைகளில். நீங்களே சொந்தமாக tune போட்டு இசையை சேமித்து வைக்கலாம்.

கீழுள்ள இணையத் தளங்களில் போய்ப் பார்த்தால் நான் மேலே கூறியவை வெறும் கடுகளவு என்பதை உணருவீர்கள்.

http://101bestandroidapps.com/
http://www.androidfreeware.net/

பெரும்பாலான அன்ட்ரோயிட் பயன்பாடுகள் ( applications ) இலவசமாகவும் சில தொகை செலுத்திப் பெறக்கூடிய வகையில் உள்ளன .

என்ன அலைபேசி வாங்க கிளம்பிவிட்டீர்களா? Android உள்ள அலைபேசியை பார்த்து வாங்குங்கள். விலை ருபாய் 12 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.
 

Thursday 10 March 2011

எனக்கு பிடித்த சில பிண்ணனி இசைக் கோர்வைகள்-1

எனக்கு  பிடித்த  சில பின்னணி இசைக் கோர்வைகள் - என் பிரிய இளையராஜாவின் படைப்புகளில் இருந்து  

 
நாடோடி தென்றல் 
 
 
காதலுக்கு மரியாதை
 
 
 
உனக்காகவே வாழ்கிறேன்
 
 
நாடோடி தென்றல் -2
 
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Wednesday 9 March 2011

நிலக்கரி - வருங்கால சந்ததிக்கு என்ன விட்டு வைக்கப் போகிறோம்?

இன்றைய தேவைகளில் மிக முக்கியமானதான மின்சாரம் நம் நாட்டில் கீழ்கண்ட முறைகளில் உற்பத்தியாகிறது .

1 . நிலக்கரி மூலமாக - 65 %
2 . நீரின் மூலமாக 24%
3 . அணுசக்தியின் மூலமாக 2 %
4 . காற்று மற்றும் இதர சக்திகள்( biomass ) மூலமாக 9%

இப்போது மத்திய அரசும் மாநில அரசுகளும் இன்ன பிற தனியார் நிறுவனங்களும் புதிய மின் நிலையங்களை கட்டி வருகின்றனர். இன்னும் பத்து ஆண்டுகளில் நிலக்கரி மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம் கிட்டத்தட்ட 75 சதவீதத்தை எட்டி விடும். நீர், காற்று மூலம் கிடைக்கும் மின்சாரம் கால நிலை, நீரின் இருப்பு ஆகியவற்றைப் சார்ந்தது என்பதால் இதில் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு வரையறை செய்ய இயலாத ஒன்றாகும். அணுசக்தியின் மூலம் கிடைக்கும் 2 சதவீதம் நிச்சயம் பெரிதளவு உதவப் போவதில்லை . இதற்கு பெரிய அளவில் செலவு செய்து அமெரிக்காவோடு ஒப்பந்தம் வேறு. அந்த பணத்தை பயோமாஸ் போன்ற வேறு முறைகளில் முதலீடு செய்து இருந்திருக்கலாம். மேலும் அணுமின் நிலையங்களில் வெளிப்படும் கழிவுகளை சரியான முறையில் கையாளவேண்டும். இதன் பின் விளைவுகளோ மிகவும் கொடியது. ( செர்னோபில் ஒரு உதாரணம் ).

எனவே மிக முக்கிய மூலப்பொருளான நிலக்கரியைத்தான் மின் உற்பத்திக்கு பெருமளவு நம்ப வேண்டி இருக்கிறது. நம் இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. நம் தமிழ்நாட்டில் கூட கிட்டத்தட்ட 15000 MW அளவிற்கு புதிய திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பெரிய நிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ் போன்றோர் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பெரிய பணம் கொடுத்து வாங்கி உள்ளனர். நம் தமிழக பெரும் புள்ளிகளும் வாங்கி உள்ளனர் என்ற பேச்சும் உண்டு. காசை கரியாக்காதே என்று முன்பு சொல்வர். இப்போதோ காசை கரியில் போடுகின்றனர். இப்போதுள்ள நிலக்கரி இருப்பை வைத்து இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டு வரை நாம் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு பிறகு? நம் வருங்கால சந்ததிக்கு நாம் என்ன விட்டு வைக்கப் போகிறோம்? விடை சொல்ல முடியாத கேள்வி.
வேறு மூலப் பொருள் அல்லது வேறு திட்டங்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்கப் போகிறார்களா? சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு மிக குறைவு . ஆனால் அதன் விலையோ மிக மிக அதிகம். இப்போதே தரமற்ற நிலக்கரியினால் மின் உற்பத்தியின் கொள்திறன் முழுவதுமாய் கிடைக்கவில்லை. 450MW கொள்திறன் உள்ள அனல் மின் நிலையங்களில் தரமற்ற நிலக்கரியினால் 350MW அளவிற்கே தயாரிக்க முடிகிறது. இனி வரும் காலங்களில் எப்படியோ?

இயற்கையின் மீது நம் அடுத்த தலைமுறை பாரத்தை போட்டு வாழ வேண்டும் போல இருக்கிறது. நாமும் நம் பங்கிற்கு மின்சாரத்தை மிச்சம் செய்யலாமே.
1 . அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் நகர் முழுக்க போடும் தொடர் விளக்குகளுக்கு தடை செய்யலாம்.
2 . புதிதாக கட்டப்படும் அனைத்து பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு கிரீன் பில்டிங் எனப்படும் தானியங்கி மின் சேமிப்பு முறைகளை கட்டயாமாகலாம். சுடு தண்ணீர் பெறுவதற்கு சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தலாம். (பெங்களுருவில் பெரும்பாலும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இதைச் செய்துள்ளனர். நிறைய வீடுகள் என்பதால் செலவு பெரிதில்லை. ஒரு வீடாக இருந்தால் மிக கடினம்) .
3 . அம்பத்தூர் போன்ற தொழிற்பேட்டைகளில் கட்டாயம் வாரம் ஒரு நாளில் 12 மணி நேரம் மின் தடை செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
நிலக்கரியை வீணடித்து வருங்கால தலைமுறையின் முகத்தில் நாம் கரி பூச வேண்டாமே ?
 

சங்க இலக்கியங்களில் சில சுவையான தகவல்கள்

இரு மாதங்களுக்கு முன்பு  சாகித்ய அகாடமி விருது வென்ற திரு. நாஞ்சில் நாடனுக்கு திருவண்ணாமலையில்  
" உண்டாட்டு " என்ற நிகழ்ச்சி நடத்துவதாகக்  கேள்விப்பட்டேன். அதென்ன உண்டாட்டு என்று தெரிந்துக் கொள்ள சங்க நூல்களைப் படிக்க நேரும்போது என்னைக் கவர்ந்த சில தகவல்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

உண்டாட்டு

உண்டாட்டு என்பது பகைவரை வென்று ஆநிரைகளை கவர்ந்து வந்த வீரர்கள் வெற்றிக் களிப்பில் மது உண்டு ஆடுவதாகும். 
ஊனும் கள்ளும் உண்பதை ‘உண்டு’ என்பது காட்டுகிறது. வேந்தன் தகுதி அறிந்து சிறப்புச் செய்தமையாலும் கள்ளுண்டமையாலும் மனம் களிப்பெய்தி ஆடியதை ஆட்டு என்பது சுட்டுகிறது. எனவே, இந்தத் துறை உண்டாட்டு எனப் பெற்றது

----------------------------------------------------------------------------------------------------------------------------------
காவல் மரம் 

பழங் காலத்தில் வேங்கை, புன்னை , வேம்பு இன்னும் சில மரங்களை வெற்றியைக் குறிக்கும் குறியீடாகவும் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் காவல் மரமாகவும் நம்பினர். இதனை வீரர்கள் இரவு பகலாக காத்து வந்தனர். இவை சில அரசர்களால் தலைநகரில் மட்டும் தனிமரமாகவும் சிலரால் ஊர்தோறும் தனிமரமாகவும் வளர்க்கப்பட்டது.  வேந்தர் தம் பகைவரின் காவல் மரத்தை வெட்டுவது மரபு. பகைவரின் வெட்டுதலுக்கு ஆட்படாது காப்பது மானமுடைய வேந்தரின் கடமை. காவல் மரத்தின் கனியினை உண்டதற்காக ஒரு பெண் கொலைத்தண்டம்  பெற்றதை நன்னன் வரலாறு உணர்த்தும். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

நடுகல்


போர்களத்தில் விழுப்புண் பட்டு வீர மரணமெய்திய வீரனின் நினைவாக அமைக்கப்படுவதே நடுகல்லாகும்.   பின்னாளில் இது வழிபடும் தெய்வமாக உருப் பெற்றது. முதலில் பெரிய கல் ஒன்றைக்  கொண்டு வந்து அந்த வீரனின் உருவம் செதுக்குவர். அருகில் ஈட்டிகளும் கேடயங்களும் அரண் போல ஊன்றப்பட்டிருக்கும் .  மாய்ந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி மராமத்து அடியில் நட்டு தெய்வமாக வழிபடுவர். இக்காலத்தில் வழக்கத்திலிருக்கும் மதுரை வீரன், கருப்பன், முனியன் முதலிய சிறு தெய்வங்கள் நடு கல்லின் உருமாறிய அல்லது வளர்ச்சி பெற்ற நிலையின எனக் கூறலாம். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

 கொள்ளை மாற்றுதல்

வெற்றி பெற்ற படை மறவர் தோற்ற பகைவர் நாட்டில் புகுந்து கொள்ளை இடுவர். இச்செயலை தடுத்து நிறுத்த அரசன் தோற்ற வேந்தனிடம் இருந்து பெற்ற பொற்கலங்களை உருக்கி பொற்கட்டிகளாகச் செய்து வீரரின் தகுதிக்கேற்ப பரிசளிப்பான் . சில சமயம் மருத நிலத்து ஊர்களையே வழங்குதல் மரபு. பசிய பயிர்கள் விளையும் சீரூர்கள் வழங்கப்பட்டாலும் வீர்கள் அதனை ஏற்காது மருத நிலத்து ஊர்களையே விரும்பிப் பெறுவர்.    

----------------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்களின் ஏழு பருவங்கள் : 

பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை, அரிவை , தெரிவை , பேரிளம்பெண். 

ஆண்களின் ஏழு பருவங்கள் :

பாலன், மீளி, மறவோன் , திறவோன் , காளை , விடலை, முதுமகன் 

தந்தையின் பெருமை

நுங்கம்பாக்கம். சென்னையை ஒரு மனிதனாக கருதினால் அதில் வரும் தொப்புள்தான் நுங்கம்பாக்கம்.  கடைகள் , கல்லூரிகள்  ,  அலுவலகங்கள் என எப்போதும் வாகனங்கள் குவியும் இடம். அதுவும் இரவு ஏழில் இருந்து  ஒன்பது வரை லயோலா கல்லூரி சப்வே  இருக்கும் இடத்திற்குச் சென்றால் நூற்றுக்கணக்கான  நத்தைகளாக நகரும் வாகனங்களைப் பார்க்கலாம். காட்டுமிராண்டிகள் வண்டி ஓட்டுவதைப்   பார்க்க விரும்பினால்  வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலைக்கு வருகை புரியவும் .  

நான் விற்பனைத் துறையில் பணிபுரிபவன் என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் எனது 125cc வண்டியில் பறப்பது வாடிக்கை.  பைக்கில் பயணிப்பது என்பது பருந்து வானத்தில் பறப்பது போல மீன் நீருக்கடியில் நிந்துவது போல மலையில் இருந்து வேகமாக இறங்குவதைப் போன்ற சுகமான அனுபவம். என்னதான் அலுவல் பிரச்னைகள் கழுத்தைப் பிடித்தாலும் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போகும்போது தழுவும் காற்று மயில் இறகைப் போல என் புண்களுக்கு நீவி விடுவது போலத்  தோன்றும்.  நான் அதை செல்லமாய் " சிறுத்தை" என்றுதான் அழைப்பேன்.
 
இப்படித்தான் கடந்த வாரம் ஒரு நாள் என் வண்டியை எடுத்துக் கொண்டு எண்ணூரில் இருக்கும் என் வாடிக்கையாளரைப்  பார்க்கச் சென்றேன்.  மெல்லிய சீற்றத்துடன் வழக்கம் போல இது என் அப்பன்  ரோடு என்று திமிராக நடு ரோட்டில் நடப்பவர்களையும் நாமெல்லாம் கனவான்கள் என்று கண்ணியமாய் இடதுபுறம்  ஓரமாக செல்பவர்களையும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதைப்  போல  
நடு ரோட்டில் துடுப்பாட்டம்  விளையாடுபவர்களையும் கண்ணாமூச்சி  பட்டாம்பூச்சி என்று காற்றில் பார்க்கும் குழந்தைகளையும் கடந்து  உறுமிக் கொண்டே சென்றான்  என் சிறுத்தை . 
 
கல்லூரி சாலையில் திரும்பும்போது  சடாரென்று என்னைக் கடந்தது அந்த சிறிய வண்டி (TVS XL Super ) . என் சிறுத்தையோடு  அதை ஒப்பிட்டால் அது மான் எனலாம். நானும் என் சிறுத்தையும் சிறு வயதில் இருந்தே தன்மானமும் கோபமும் சேர்த்து ஊட்டப் பட்டதால் அந்த மான் எங்களை சீண்டுவதாகப்  பட்டது. ஆவேசமாக முறுக்கத் தொடங்கினேன் என் சிறுத்தையின் காதுகளை . எங்கிருந்து வந்ததோ அந்த வெறி . அவன் உரசிய உரசலில் தார்ச்சாலை உஷ்ணமானது.  வானிலை ஆய்வு மையத்தில் மானை நெருங்கி திரும்பிப் பார்த்தேன். சுமார் 35 வயதுள்ள தந்தை அவருக்கு முன்னால் 4  வயதுள்ள அவர் பையன் எங்களைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அந்தப் பையன் அவன் தந்தையிடம் " அப்பா ! இன்னும் வேகமாக போங்கப்பா. நாம்தான் win  பண்ணனும்  " என்று சொன்னான். அவரும் கீதா உபதேசம் பெற்ற அர்ஜுனன் போல தனது மானை விரட்டினார். இப்படி நாங்களும் அவர்களும் மாறி மாறி முன்னேறிக் கொண்டு இருக்க  பாந்தியன் சாலைக்கு முன் உள்ள பாலத்திற்கு அருகில் வரும் போது முன் இருந்த சிக்னலில் நாங்கள்  அருகருகில் காத்திருக்கத் தொடங்கினோம் .  அப்போது அந்த சிறுவன் தனது தந்தையிடம் " நீயும் இந்த பெரிய வண்டி வச்சிருந்தா நாம ஈசியா  ஜெயிக்கலாம்ல " என்றான் . அந்த தந்தை " இதிலேயே ஜெயிக்க்கலாம்டா . அது சும்மா ஷோ வண்டி " என்றார். பாவம் அவருக்கு என்ன பிரச்னையோ? குடும்பம் நடத்துவது என்பது கயிற்றின் மீது நடக்கும்  சாகசப் பயணம் அல்லவா . சம்பளம்,வாடகை,  படிப்பு செலவு, மருத்துவச் செலவு இன்னும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகள் போல செலவுகள் .
 
பச்சை விளக்கு விழுந்தவுடன் மானும் சிறுத்தையும் பாயத் தொடங்கின.  எக்மோர் மேம்பாலம் ஏறத் தொடங்கினோம். மெல்ல மெல்ல என் சிறுத்தையின் வேகம் குறையத் தொடங்கியது.  கீழே இறங்கும் போது மான் எங்களை வேகமாக் கடந்து சென்றது. சற்று தொலைவில் அந்த சிறுவனின் குரல் " அய்யா  . அய்யா. நாம வின் பண்ணிட்டோம் . ஹோய் ஹோய் " என்று வெற்றிக் களிப்பின் கொக்கரிப்பு கேட்டது . எல்லாக்  குழந்தைகளும்  தங்கள் தந்தை மற்றவரிடம் தோற்க கூடாது என்று விரும்புகின்றன.  என் சிறுத்தையை  நான் அன்போடு  தடவிக் கொடுத்து" தேங்க்ஸ் டா "  என்றேன்.   தூரத்தில் அவன் அப்பா திரும்பி எங்களைப் பார்த்தார் . அதில் தெரிந்தது நன்றியா இல்லை எகத்தாளமா என்று தெரியவில்லை.