Wednesday, 30 March 2011

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள்


சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கவும் பொது மக்களுக்கு உதவவும் சில முக்கிய மாநகர்களில் கொண்டு வரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில் திட்டம்.
சென்னையில் இரு பாதைகளில், வண்ணாரப்பேட்டைலிருந்து ப்ராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியே சென்னை விமான நிலையத்திற்கும் (23.1 கிமீ) மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை ( 22 கி மீ) இரண்டுமே தலா 18 நிலையங்கள் உள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் Rs .16000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதில் 41 % தொகையை மத்திய மாநில அரசுகளும் மீதியை Japan International Cooperation Agency (JICA) இடம் கடன் பெற்று செலவழிக்கப் போகின்றன.
இதில் வன்னாரப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை வரை தரைக்கு கீழேயும் பிறகு விமான நிலையம் வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை தரைக்கு கீழேயும் பிறகு பரங்கிமலை வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்க வழியை தரைக்கு சுமார் 12 மீ. க்கு கீழே வரும்படி அமைக்கப் போகிறார்கள். 4 கார் (1038 பிரயாணிகள்) மற்றும் சில வருடம் கழித்து 6 கார் (1580 பிரயாணிகள்) தொடர் வண்டிகள் இதில் பயன்படுத்தப்படும்.
இந்த தடங்களில் 2016 ஆம் ஆண்டு தினமும் 7,56 ,466 பேரும் 2026 ஆம் ஆண்டு தினமும் 10,64 ,048 பேர்களும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணசீட்டாக ஸ்மார்ட்கார்டும், தரைக்கு கீழ் உள்ள நிலையங்கள் முழுதும் குளிரூடப்பட்டவைகளாக இருக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளது . தொடர் வண்டிகள் சுமார் 80 கிமீ வேகத்தில் செல்லும். காலை ஐந்தில் இருந்து நள்ளிரவு 12 வரை இதனை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
முதல் 2 கிமீ வரை Rs .8 ல் ஆரம்பித்து அதிகபட்சமாக Rs .23 வரை பயணத் தொகையாக நிர்ணயம் செய்துள்ளனர். சுரங்க வழிகளில், பயணசீட்டில் விளம்பரங்கள் மற்றும் வண்டி நிறுத்துமிடம் மூலம் பணம் திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.
நாமும் ஒரு புதிய பயணத்திற்கு தயாராவோம்.

Monday, 21 March 2011

மழை ஏன் பெய்கிறது


என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறேன் . வானாபுரம் செல்வதற்கு பேருந்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து வெறுத்துப் போய் ஒரு ஆட்டோவை நோக்கி கை நீட்டினேன்.
" எங்கே போகணும் சார் ? "
" வானாபுரம் பக்கத்தில அத்திபாடி "
" சார். பயங்கர மழை. பதினெட்டு கிலோமீட்டர். 300 ரூபா ஆவும் " .
யோசித்தேன். மிக முக்கியமான தேவைக்காக என் நண்பன் உமா மகேஸ்வரனிடம் ஐம்பதாயிரம் கடன் கேட்டு இருந்தேன். இன்று வாங்கிச் சென்று நாளை சென்னைக்கு போய் அந்த பணத்தைக் கட்டவேண்டும்.
" சரி. வா போகலாம்"
வண்டி மகிழ்ச்சியுடன் கிளம்பியது . தாமரை நகரை அடைந்தவுடன் நன்றாக உடை அணிந்த அந்த நபர் கை அசைத்தார். ஆட்டோ அருகில் போய் நின்றது.
" தண்டராம்பட்டு போகணும் . வருமா ? "
" இல்லை சார். நாங்க அத்திபாடி போறோம் . "
" சரி. நான் செட்டிபட்டில் இறங்கிக்கிறேன் "
ஆட்டோக்காரர் என்னிடம் திரும்பி " சார். உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே . 250 ரூபா தந்தா போதும் " என்று கேட்டார் .
நானோ " சரி சரி. அவர் வரட்டும் " என்றேன்.
அவசரமாய் உள்ளே நுழைந்து தன் இடத்தை ஆக்கிரமித்தார்.
என்னைப் பார்த்து " என்ன பண்றீங்க ?" என்று கேட்டார். சொன்னேன்.
தன் பெயர் சாத்தப்பனோ சாந்தப்பனோ ஏதோ சொன்னார். புரியவில்லை. அவரது பருத்த மேனியைப் பார்த்து நானாக சோத்தப்பர் என்று சூட்டினேன். சென்னையில் விற்பனைப் பிரிவில் பணிபுரிவதாகவும் இங்கு தண்டரம்பட்டுக்கு பக்கத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பணி நிமித்தம் செல்வதாகவும் சொன்னார். தலையை நன்றாக ஆடினேன். பெருமழை என்பதால் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி இருந்தது. சோத்தப்பர் உடனே " நம்மள விட கேரளாவில மூன்று மடங்கு அதிகமா மழை பெய்யும் . ஆனா தண்ணியே தேங்காது. பாருங்க. நாம ரோடு எல்லாம் வேஸ்ட். எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க " என்றார். சற்று தொலைவு சென்றவுடன் பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கியவுடன் " பாம்பே ரோடு எல்லாம் பளிங்கு மாதிரி இருக்கும். ஒரு பள்ளம் கூட இருக்காது. நம்ம ரோட்ட பாருங்க " என்றார். தலையை நன்றாக ஆடினேன். வேறு என்ன செய்ய ?
" உன் பெயர் என்ன ? " என்று ஆட்டோகாரரிடம் கேட்டார்.
" அண்ணாமலை "
" ஊரும் அண்ணாமலை. நீயும் அண்ணாமலையா ? வேற பேரே கிடைக்கலையா " என்று கூறி கெக்கே பிக்கே என சிரித்தார்.
தன் கையில் உள்ள புது மாடல் தொடுதிரை உள்ள அலைபேசியில் பேசலானார் " பிஸ்ஸா பாய் வருவான். வந்தா நானூறு ரூபாயும் ஒரு நாப்பது ரூபா டிப்சும் கொடுத்துடு " .
செட்டிபட்டு வந்தது. சோத்தப்பர் இறங்கினார். பெரும் பாரம் இறங்கியதைப் போல தோன்றியது.
ஆட்டோகாரர் அவரிடம் " சார். நூறு ரூபா கொடுங்க " என்றார் .
" என்ன அநியாயமா இருக்கு. சென்னையிலே எண்பது ரூபாதான். ரொம்ப கொள்ளை அடிக்காதே "
" சார். மழை. பத்து கிலோமீட்டர் . பார்த்து கொடுங்க "
" ம்ஹீம் . எண்பது ரூபாதான் என்று சொல்லியபடி காசை எடுத்து அவன் கையில் திணித்தார்.
ஆட்டோ சிறிது யோசனைக்கு பின் அத்திப்பாடி நோக்கிப் புறப்பட்டது. இருபது ருபாய் காப்பாற்றிய
மகிழ்ச்சியில் சோத்தப்பர் அடுத்த வண்டியை தேடலானார்.
சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு பள்ளிச் சிறுமிகள் சாலையில் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஒரு பாட்டி தன் புடவையில் மழையை தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அண்ணாமலை ஆட்டோவை அவர்கள் பக்கம் நிறுத்தி ஏறச் சொன்னார்
" இல்லை பரவாயில்ல " என்ற பாட்டியிடம் " காசு எதுவும் தர வேண்டாம் " என்று சொல்லி என்னைப் பார்த்து "சார் . கொஞ்சம் முன்னாடி அட்ஜஸ்ட் பண்ணிட்டு உட்காரீங்களா ? " என்றார் .
வெறுப்புடன் முன்னாடி வந்து உட்கார்தேன். மனதில் ஆயிரம் எண்ணங்கள் . உமா மகேஸ்வரன் பணத்தை தருவானோ மாட்டானோ என்று . அவன் கொஞ்சம் fraud தான். இருந்தாலும் நம்பிக்கைதான் வாழ்க்கை.
என்னிடம் பேசத் தொடங்கினார் அண்ணாமலை. தான் பன்னிரெண்டாவது வரை ( 980 மார்க்குகள் ) படித்து இருப்பதாகவும் தன் தந்தையார் இறந்ததனால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்றும் இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இல்லாததினால் படிக்காமல் ஆட்டோ ஒட்டி தன் குடும்பத்தைக் காப்பற்றி வருவதாகவும் சூழல் அவரை வேறு திசைக்கு திருப்பி விட்டதாகவும் சொன்னார்.
சிறுமிகளும் அந்த பாட்டியும் இறங்கிக் கொள்ள நான் அவரிடம் பேசத் தொடங்கினேன்.
" பாவம் சார் இந்த குழந்தைங்க . இவங்களாவது படிச்சி பெரிய ஆளாகி தன் தலைமுறையை வளர்த்து விடட்டும் . சூழல் எதுவும் கெடுத்திடக் கூடாது என்றார். "
முன் பின் தெரியாத அந்த குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் பாட்டி மழையில் நனையக் கூடாது நினைக்கும் அவரை மரியாதையோடு பார்த்தேன்.
சோத்தப்பர் போன்று குவிந்துக் கிடக்கும் மாநகர கூட்டத்தோடு தினமும் பழகும் எனக்கு இந்த சிறிய ஊரின் பெரிய மனிதர் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.
அத்திபாடி வந்தது.
இறங்கி அவரிடம் நானூறு ருபாய் கொடுத்தேன்.
" சார் " என்றார்.
" பரவாயில்லை . வச்சிக்கோங்க " .
" தேங்க்ஸ் சார் "
மழை பெய்துக் கொண்டே இருந்தது.
ஏன் பெய்கிறது எதற்கு பெய்கிறது என்ற காரணம் தெரிந்தது.

வசை


எங்களுடைய உயர் அதிகாரி எங்களை பாலக்காடிற்கு போகச் சொல்லி விட்டார். அங்கே தோனி (தோனி என்றால் உங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) என்றொரு இடம். அதற்கு பக்கத்தில் இருக்கும் ரயில்வே டிவிசன் ஆபீசுக்கு செல்ல வேண்டும். என்னோடு கிஷோரும் சாந்தமூர்த்தியும் வருகிறார்கள். ஞாயிறு மதியம் கோவை எக்ஸ்ப்ரஸில் கிளம்பி கோவை சென்று அங்கு ரூம் போட்டு பின்னர் மறுநாள் காலை பாலக்காடு செல்லலாம் என்று திட்டம்.
கம்பெனி செலவு என்பதால் நாங்கள் எப்போதும் AC இல்தான் செல்வது வழக்கம். எங்கள் சொந்த காரியத்திற்கு சென்றால் sleeper (அ) unreserved . சென்னை சென்ட்ரலில் குழுமி இருந்த மனிதக் கூட்டத்தில் எவரிடமும் இடிபடாமல் இருக்க வளைந்து நெளிந்து பறந்து எங்கள் கோச்சை அடைந்தோம். எப்போதும் சார்டைப் பார்க்கையில் நம்மோடு இன்று யாரெல்லாம் பயணம் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம். பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் நம் பக்கத்து சீட் என்றால் அந்த பயணமே முழுமை அடைந்ததாக அர்த்தம். இந்த முறை சில தாத்தாக்களும் பாட்டிகளும் எங்களோடு பயணிப்பதால் நாங்கள் வாழ்க்கையே வெறுத்துப் போனது உங்களுக்கு பேரின்பத்தை அளிக்கும்.
மெல்லிய சீரான குளிர் காற்று என் உடலை புணரத் தொடங்கியது. ஆசனத்தில் சாய்ந்தபடி ஹெட்போனில் காற்றுக்குள்ளே வாசம் போல எனக்குள் நீ என்ற யுவனின் குரலைக் கேட்டபடி வெளியே பார்த்தேன். பனை மரங்கள், நீர்குட்டைகள் என்று அனைவருக்கும் எங்கள் கண்களால் செய்தி பரிமாறிக்கொண்டு சென்றோம். பரிசோதகர் எங்களிடம் வந்து சோதனை இட்டு பின்னர் எதாவது இருக்கை காலியாக உள்ளதா ஏதேனும் சம்பாதிக்க முடியுமா என்று தீவிரமாக சார்டையே வைத்து ஏதோ சமன்பாடு செய்து கொண்டு இருந்தார்.
காட்பாடி முன்னரும் பின்னரும் ஏகப்பட்ட தென்னை மரங்கள். ஒரு வேளை இந்த ஊர் வெயிலூராக இருப்பதற்கு இது காரணமோ என்று கிஷோர் கேட்டான். எதிரே இருந்த தாத்தாவை வெறுப்புடன் பார்த்தபடி எனக்கு தெரியாது என்று சலிப்புடன் சொன்னேன். என் கவலை எனக்கு. என்னிடம் எதுவும் தேறாது என்று சாந்தமூர்த்தியிடம் போய் பாலாறு வற்றியதற்கு காரணம் ஆம்பூர் சாயக் கழிவு பட்டறைகளா, பாலக்காடில் ஒரு கோட்டை இருக்கிறதாமே அது நம் செஞ்சி கோட்டை போல் இருக்குமா என்றெல்லாம் ரகுவிடம் கேட்க, சாந்தமூர்த்தி விஞ்ஞானி ஆக வேண்டிய பிள்ளையை விற்பனைப் பிரிவுக்கு மாற்றி இழுத்து விட்டோமோ என்ற கவலையில் ஆழ்ந்தான். சேலம் வந்தவுடன் அந்த பெரியவர்கள் இறங்கிக் கொள்ள நாங்கள் சற்று நிம்மதி அடைந்தோம்.
சிறிது நேரத்தில் போலியோ தாக்கப்பட்டு நடக்க முடியாத மிகவும் அழுக்காக பக்கத்தில் வந்தால் நாற்றமடிக்கும் அந்தச் சிறுவன் ஒரு அழுக்குத் துணியால் தரையை துடைத்துக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு குடலைப் புரட்டியது. ஓரமாக கர்சீப்பால் என் மூக்கைப் பொத்திக் கொண்டு அவனைப் பார்ப்பதை தவிர்த்தேன். சாந்தமூர்த்தி அவனுக்கு ஐந்து ருபாய் கொடுத்தான். நான் அவனிடம் இது அதிகம் என்பது போல பார்த்தேன்.
அவன் இப்போது என்னைப் பார்த்து நான் கடவுள் படத்தில் பூஜா ஆர்யாவிடம் மரண பிச்சை கேட்பது போல காசு காசு என்று கெஞ்சினான். கொடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கும் போது உள்ளே நுழைந்த அந்த பரிசோதகர் ஆவேசமாக அவனைப் பார்த்து "நாயே. உன்னை இங்க எல்லாம் வரகூடாதுன்னு சொல்லியும் திமிரெடுத்து இங்க வரியா? பரதேசி. கொன்னுடுவேன். ஓடிப் போய்டு" என்று கத்தி விட்டு என்னைப் பார்த்து "பாருங்க சார். இந்த நாய்க்கு எதாவது வேணும்னா second seating / unreserved போலாம்ல. சொகுசா AC ரூமுக்கு வந்து பிச்சை எடுக்குது பன்னாடை. அவங்கம்மா இந்த சனியன ரயிலுக்கு பெத்துட்டு ஜாலியா எவன்கூடவோ இருக்கா. இது நம்ம தாலிய அறுக்குது" என்று சகட்டு மேனியில் கெட்ட வார்த்தைகளால் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு திட்டினார். அவரது இன்றைய இலக்கு தவறி விட்டது போலும்.
AC ரூமுக்கு வந்து பிச்சை எடுத்த அந்த மாபெரும் குற்றத்திற்காக தன் சுயமரியாதை இழந்து வசைச் சொற்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் நொந்து சென்றான் அவன். ஈரோடு தாண்டியவுடன் ஒருவன் கையில் DVD களை அடுக்கியபடி "சார். புது படம். புது படம்" என்று கூவியபடி என்னிடம் நீட்டினான். தமிழ் சினிமாக்களை இப்போது எந்த வடிவிலும் பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். கிஷோரும் சாந்தமூர்த்தியும் தலா ஒரு DVD வாங்கிக் கொண்டனர். அந்த நபர் "வணக்கம் சார்" என்றபடி பரிசோதகரிடம் கொஞ்சத் தொடங்கினான்.
சிறு உரையாடலுக்குப் பிறகு "சரி சார். நான் வரேன். இத வச்சிகோங்க" என்றபடி ஒரு புது படத்தின் DVD யை கொடுக்க அவர் தலையைக் குனிந்தபடி யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்டார்.
சில நொடித்துளிகள் கழித்து வெளியே வந்தேன். அங்கே அந்த சிறுவன் உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் முகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் விசும்பும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் முதுகை தட்டி "தம்பி" என்றேன். அவன் திடுக்கிட்டு திரும்பி தன் கண்ணீரை துடைத்தான் . "இந்தப்பா வச்சிக்கோ" என்று ஒரு இருபது ருபாய் நோட்டை அவனிடம் கொடுத்தேன். அவன் வாங்கும்போது அந்த நோட்டில் காந்தியின் கண்ணில் ஒரு சொட்டு நீர் இருந்தது .

Sunday, 20 March 2011

புவி வெப்பமாதலின் விளைவு


சென்னை எண்ணூர் பகுதியில் மெல்ல மெல்ல கடல் அரித்துக் கொண்டே வருகிறது . நான் கடந்த 8 வருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட 20 முதல் 30 mtr வரை நர்ருக்குள் வந்து இருக்கிறது. பெரிய பாறைகள் போடப்பட்டும் மெல்ல நுழைவதை தடுக்க முடியவில்லை. புவி வெப்பமாதலின் விளைவுகளை இங்கு பார்க்க முடிகிறது.  .





இப்படியே மெல்ல மெல்ல ஊருக்குள் வருவதால் இந்த பகுதிகளில் கரையோரத்தில் குடிசைகளில் வாழும்  விளிம்பு நிலை மீனவர்கள்  வேறு புலம் தேடி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். 

எனக்கு பிடித்த இசை


ராம்ஸ்டீன் - Industrial metal genre - German - இவர்களுடைய பாடல்களை பெரிய theatre ஆடியோ சிஸ்டமில் கேட்டால் கட்டாயம் காது ஜவ்வு கிழிவது நிச்சயம். ஆனால் சில பாடல்கள் அற்புதமாக நல்ல கருத்துக்களை சொல்லும் .

பிரபலம் ஆவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய துடிப்பவர்களையும் , வணிகத்திற்காக கேவலமான விஷயங்களுக்கு முன்னுரிமை தரும் ஊடகங்களையும்
 பொது மக்களையும் இந்த பாடல் விவரிக்கிறது.


http://www.youtube.com/watch?v=f4K6ZxDwi34

இந்த பாடல் " புதிய முகம் " என்ற மலையாள படத்தில் வரும் பாடல். பிச்ச வெச்ச என்றால் அடி எடுத்து நடக்க ஆரம்பித்த நாள் முதல் என்று அர்த்தம். மலையாள கலாச்சாரத்தின் குறியீடாக இந்த பாடலை எண்ணத் தோன்றுகிறது.


http://www.youtube.com/watch?v=GS-GzjQN8f0





இசையில் அதுவும் மூங்கில் சார்ந்தது என்றால் (bamboo music ) சீன , ஜப்பானிய இசையை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் கிடையாது. அதுவும் நீங்கள் மிகுந்த மனச்சோர்வுடன் இருக்கும் போது இந்த இசையை கேட்டால் இதமாக வருடும்
தென்றலைப் போல .
மயிலிறகைப் போல.

ஜப்பானிய நாட்டுப்புற இசையின் ஒரு வகையான சகுரா என்பது வேனிற் பருவத்தை வரவேற்கும் இசை. செர்ரி
 மலர்வதைக் குறிப்பது.


http://www.youtube.com/watch?v=6DOg2Rpg0-4&playnext=1&list=PL8FB8E80DE51AD48A


சாரு புகழ்கிறாரே என்று ரேகே இசையினை கேட்டேன். நன்றாக இருக்கிறது. லத்தின் இசையினை ஒத்த தாகவே உள்ளது.


http://www.youtube.com/watch?v=_ZdYPPnvc8I&feature=related

Friday, 11 March 2011

 அசத்தும் அன்ட்ரோயிட் அலைபேசிகள் - அடுத்த தலைமுறைக்கு


அலைபேசி என்பது பேசுவதற்கு மட்டும்தான் என்று எண்ணுபவன் என் நண்பன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அலைபேசியை வைத்து பேசுவது மட்டுமில்லாமல் மற்ற பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் .

Android என்பது அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுப்பு. ஜாவாவால் ப்ரோக்ராம் செய்யப்பட்டு இருக்கும். இது நோக்கியா தவிர பிற நிறுவன அலைபேசிகளில் உள்ளது. GPRS , 3G , WIFI மூலம் இதனை இணைத்து உபயோகப் படுத்தலாம்.
இதில் உள்ள ஆயிரக்கணக்கான பயன்பாடுகளில் (application) சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* முன்பின் தெரியாத இடத்திற்கு சென்றால் கூகிள் வரைபடம் மூலமாக நாம் போக வேண்டிய இடத்தை கண்டு பிடிக்கலாம்.
* நண்பர்களை குழுவில் இணைத்துக் கொண்டால் அவர் இருக்குமிடத்தைக் காணலாம். நண்பர் அடையாரில் இருந்து கொண்டு "பத்து நிமிடத்தில் நுங்கம்பாக்கம் வருகிறேன்" என்று பொய் சொன்னால் மாட்டுவது உறுதி. கணவர்களுக்கு இது மிகப் பெரிய தலைவலியை உருவாக்கும். யாராவது கடத்தப்பட்டால் ( அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யாவிட்டால்) கூட கண்டு பிடித்துவிடலாம்.
* காரோடு இணைத்துக் கொண்டால் கவலையே இல்லை. அது இப்போது எங்கு இருக்கிறது, யார் திருடி எங்கே வைத்துள்ளார், சாலையில் நாம் போகும் இடத்தை வழி காட்டிச் செல்லுதல், தரிப்பிடம் குறித்த கால இயக்கி (parking timer ) , தூரம் காட்டி (Distance indicator ) இன்னும் பல . ஆனால் மகிழுந்தில் (கார்) WIFI இணைப்பு இருக்கவேண்டும்.
* அலைபேசி தொலைந்து போகும் என்ற கவலை வேண்டாம். புதிய தகவல் அட்டையை (sim card ) மாட்டும்போது நம் அலைபேசியின் இருப்பிடம் அறிந்து கொள்ளலாம் மற்றும் தானாக பூட்டிக் கொள்ளும் வசதி. மேலும் ஒலி எழுப்பி திருடியவரை பயமுறுத்தலாம். அப்படியும் கிடைக்காவிட்டால் தொலை இயக்கி மூலம் நம் தனிப்பட்ட தகவல்களை அழித்து விடலாம். என்ன கொஞ்சம் செலவாகும் .
* இன்னொரு பயன்பாட்டைப் பயன்படுத்தி நம் அலைபேசியை கொண்டு ஆகாயத்தை நோக்கி நீட்டினால் விண்கலங்கள் எங்கெங்கு சுற்றி கொண்டு இருக்கின்றன என்பது தெரிந்து விடும். மேலும் ஒரு வாரத்திற்கான வானிலை அறிக்கை போன்றவையும் பார்க்கலாம்.

* இரத்த அழுத்தம், நம் உடலின் வெப்ப நிலை , இதயத் துடிப்பு போன்றவற்றையும் சோதித்துக் கொள்ளலாம். மாதிரி உடற்பயிற்சி முறைகளைப் பார்த்து நாமும் அது போல செய்யலாம்.
* பணத்தை திட்டமிடுதல் ( money manager ) , வரவு செலவு விவரம் ( வார மற்றும் மாத ), செலுத்த வேண்டிய பில் விவரங்கள், நேரம் திட்டமிடுதல் ( சமைக்க , உடற்பயிற்சி , சாப்பிடும் மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கு ஆகும் நேரம் தெரிந்து கொள்ள) , மற்றும் facebook , twitter போன்ற சமூக தளங்களையும் இணைத்து கொள்ளலாம்.

* ATM களை கண்டுபிடிக்கலாம். குறுஞ் செய்தி, புகைப்படங்கள் மற்றும் மின் அஞ்சல்களை பூட்டி கடவுச் சொல் கொண்டு திறக்கும்படியாகச் செய்யலாம். மொழி பெயர்ப்பு வசதியும் உண்டு. (இந்திய மொழிகளில் இன்னும் வந்ததா என்று தெரியவில்லை) .

* குழந்தைகளுக்கு தேவையான மருத்துவக் குறிப்புகள், உணவுக் குறிப்புகள், பெண்கள் தங்கள் மாத விலக்கு தேதியை பதிவு செய்தால் அவர்கள் எந்தெந்த நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் போன்ற ஆலோசனைகளும் உள்ளது.

* உலகில் உள்ள தமிழ் வானொலிகள், 210000 உணவகங்களின் தொகுப்பு, இசை, சினிமா என்று அனைத்துமே உங்கள் கைகளில். நீங்களே சொந்தமாக tune போட்டு இசையை சேமித்து வைக்கலாம்.

கீழுள்ள இணையத் தளங்களில் போய்ப் பார்த்தால் நான் மேலே கூறியவை வெறும் கடுகளவு என்பதை உணருவீர்கள்.

http://101bestandroidapps.com/
http://www.androidfreeware.net/

பெரும்பாலான அன்ட்ரோயிட் பயன்பாடுகள் ( applications ) இலவசமாகவும் சில தொகை செலுத்திப் பெறக்கூடிய வகையில் உள்ளன .

என்ன அலைபேசி வாங்க கிளம்பிவிட்டீர்களா? Android உள்ள அலைபேசியை பார்த்து வாங்குங்கள். விலை ருபாய் 12 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.