Saturday 6 July 2013

நிசப்தம் எழுப்பும் குரல்





FACEBOOK யில் சேர்ந்த சில மாதங்களிலே நண்பன் வேல்கண்ணன் வா.மணிகண்டனின் ப்ளாக்கை அறிமுகப்படுத்தி அவரது கவிதைகளைப் படி என்று நிர்பந்தித்தான். பயந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் கவிதைகள் மிகவும் ஈர்த்ததால் தொடர்ச்சியாக அவரை வாசிக்கத் தொடங்கினேன். எழுத்துக்களில் இருக்கும் மெச்சூரிட்டியைப் பார்த்ததும் அவருக்கு 35-40 வயது இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் 30 வயது கூட நிரம்பாதவர் என்று தெரிந்ததும் இன்னும் ஆச்சர்யம் அதிகமானது. ( டி என் ஏ டெஸ்ட் செய்து உண்மையை கண்டறிய விரும்புகிறேன் ).

ஒரு முறை ஈரோட்டுக்கு பணிக்காக சென்ற நான் பின் அப்படியே பெரியார் வீட்டுக்கு செல்லலாம் என்று சென்றிருந்தேன். அன்றைய நாளில் மணி ஆதிக்க ஜாதியைத் திட்டி ஒரு பதிவிட்டு இருந்தார். சரி விளையாடலாமே  என்று எண்ணி அவரது அலைபேசி எண்ணுக்கு அழைத்து “ தம்பி நான் உசிலம்பட்டியில் இருந்து மூக்கையாத் தேவர் பேசறேன் . ஜாதியை திட்டி இன்றைக்கு பதிவிட்டு இருக்கீங்க. இனிமேல் எழுதினா அவ்வளவுதான் “ என்று 10 நிமிடம் மிரட்டினேன். அவர் பொறுமையாக தன் தரப்பு வாதத்தை எடுத்துச் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. பிறகு உண்மையைச் சொன்னதும் அவர் நீங்கதாங்க இன்றைக்கு பேசியவர்களில் ரொம்ப டீசண்டாகப் பேசியவர் என்றும் மற்றவர்கள் அனைத்து ஸ்லாங் தமிழ்களில் இருக்கும் கெட்ட வார்த்தைகளில் அர்சித்தார்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதன் பிறகு பெங்களூருவில் / சென்னையில் சில முறை அவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. மிகவும் எளிமையானவர் முக்கியமாக பந்தா இல்லாதவர் . ஐ.டி துறையில் நல்ல சம்பளம் வாங்கினாலும் ஆடம்பரத்தை பெருமளவு தவிர்த்தார். 3000 ரூபாய் மதிப்புள்ள அலைபேசியை போன மாதம் வரை பயன்படுத்தி வந்தார்.

அவரது கவிதைகளில் மிகவும் ஈர்க்கப்பட்ட நான் திடீரென அவர் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு கட்டுரைகள் எழுதுவதைப் பார்த்ததும் எரிச்சலானேன். அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். அவர் சரிங்க என்றார்( வழக்கம் போல) . ஆனால் தொடர்ந்து அதையே செய்ய ஆரம்பித்தார். பிறகு ஒருநாள் அவர் “ சிறந்த இணையதள எழுத்தாளர்“ விருது பெற்றவுடன் தான் செய்தது சரிதான் என்று எனக்கு நிருபித்தார். ஒரு முறை கோபி சென்ற போது அவரது ஊருக்குப் ( கரட்டடிப்பாளையம்) போய் பார்க்கலாம் என்று சென்றேன். அந்த ஊரில் பிஸ்ஸா கடையைப் பார்த்ததும் திகிலடைந்துப் போனது தனிக் கதை.

ஒரு முறை அவரிடம் “ உங்களை ஒரு நபர் மிரட்டினார் என்று சொன்னீர்களே . யார் அது ?“ என்று கேட்ட கேள்விக்கு இரண்டு வருடங்கள்  கழித்தே பதிலளித்தார். அந்தளவுக்கு உஷாரான மனிதர். வசுமித்ர பற்றி ஒரு கவிஞர் போட்ட பதிவைப் படித்து தவறாக எண்ணிக் கொண்டிருந்த என்னிடம் மணிதான்  வசுமித்ர நல்ல கவிஞர் என்றும் அந்த பதிவு அவதூறு என்று சொன்னார். முதலில் நான் நம்பாவிட்டாலும் பின்னர் வசுமித்ரவை நேரில் பார்த்து பழகிய பின் மணி சொன்னது சரி என்று உணர்ந்தேன். மணி தன்னை கடுமையாக எதிர்ப்பவர்களைக் கூட காழ்ப்புணர்வு இல்லாமல் பாராட்டியதைப் பார்த்திருக்கிறேன்.

 நேற்று போட்ட ஒரு பதிவால் திரும்பவும் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார் மணிகண்டன். உணர்ச்சி வசப்படும் தமிழ் சமூகத்தில் நிதானமாக தன் கருத்துக்களை தெளிவாக தெரிவிப்பது மணியின் பலமாகத்தான் நான் கருதுகிறேன். அறிவியல் மற்றும் சுவாரஸ்யமான நடை என்ற சுஜாதாவின் இடத்தை நிரப்பக் கூடியவர்களில் ஒருவராக எனக்கு மணி தெரிகிறார். அவர்  ஒரு விஷயத்தை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பது நிறைய பேருக்கு எரிச்சலைத் தருவது ஆச்சர்யமில்லைதான். ஆனால் நிச்சயம் அவர் ஒரு சார்பானவர் இல்லை என்பது தொடர்ச்சியாக அவரை வாசிப்பவர்களுக்குப் புரியும். அவரிடம் நிறைய குறைகள் இருக்கின்றன ஆனால் அதை அவரிடம் மட்டும் சொல்வது நட்புக்கு அழகு என்று நினைக்கிறேன்.

நேற்று என்னை மணி அழைத்த போது “ நீங்க ஆன்ட்ராயிட் போனை வாங்குங்க. LINE APPயை தரவிறக்கம் செய்து இலவசமாக பேசலாம் மணி “ என்றேன். அவர் “ இப்பத்தாங்க ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நோக்கியா போன் வாங்கினேன். அதுவே போதுங்க “ என்றார்.

அதுதான் மணி.



3 comments:

  1. மணிக்கு மணியைப் பற்றிக் தெரிந்திருக்குமோ?

    ReplyDelete
  2. அட... இந்தப் பதிவு ரொம்ப intersting ஆ இருக்கே.. பேசாம நீங்க ப்ளாக்ல எழுத ஆரம்பிச்சுடுங்க!! துண்டு துண்டா முகநூலில் எழுதவுடை எல்லாம் ஒரு பதிவாக, கட்டுரையாக வாசிக்கலாம்

    ReplyDelete