Thursday, 26 July 2012

மார்பம்






சாய்வு நாற்காலியில் பரப்பிக் கொண்டு எதிரே இருந்த மாமரத்தை வேடிக்கைப் பார்த்தேன். முன்பு நிறைய பறவைகள் வருவதும் போவதுமாய் கூடு கட்டுவதுமாய் ஒரே கொண்டாட்டமாய் இருக்கும் . இப்போது சுற்றிலும் அடுக்கப்பட்ட கான்கீரிட் அசுரர்களால் வருவது அதிகமாக குறைந்து விட்டது.
மெதுவாக என் கொங்கைகளை தடவிக் கொண்டேன்.ஒரு காலத்தில் இது என்னவெல்லாம் சந்தித்து இருக்கிறது. மகிழ்ச்சி , துயரம், வலி, பதட்டம், தவிப்பு என்று எண்ணற்ற உணர்வுகள். ராஜேஷ் பிறந்த போது உணவை வழங்கி அவனை உயிர்ப்பித்தது இந்த வெண்குருதி அல்லவா.   
முதலில் அவனுக்கு பால் புகட்ட மிகவும் சிரமமாக இருந்தது. அவனுக்கு குடிக்கத் தெரியாததால் மார்பினுள் பால் கட்டிக் கொள்ளும். வலி உயிர் போகும். குழந்தை பசியால் அழுவான். என்ன செய்வதென்று தெரியாமல் கைகளால் அழுத்தி அழுத்தி அந்த கெட்டிப் பகுதியை வெளியேற்றி பின் அவனுக்கு பால் ஊட்டுவேன். வலியின் உச்சத்தை சண்டையிட்டு வென்றுத் திரும்புவது போன்றது அது.
பயணங்களில் இன்னும் சிரமம். சுற்றிலும் இருக்கும் வல்லூறுகளின் பார்வை நம் மீதே பதிந்து இருக்கும். சற்று கூட நாகரீகமில்லாமல் குழந்தைக்கு பாலூட்டும் கொங்கைகளை காமப் பார்வையோடு அளவெடுக்கும் கும்பல்.
இரவு  ரயில் பயணத்தில் கீழ் படுக்கையில் இருந்து ராஜேஷுக்கு பால் கொடுக்க மிகவும் சிரமமாக இருக்கும். நிமிர முடியாது கூணல் முதுகில் சிறிது நேரம் அவனுக்கு பால் ஊட்டினாலே முதுகு வலி அதிகமாகி விடும்.
அவன் நிறைய பால் குடிக்க வேண்டுமெனில் நான் நிறைய சாப்பிட வேண்டும் . டாக்டர் கொடுத்த பால் பவுடர் பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி சாப்பிட வேண்டியதாயிற்று.
பயணங்களில் வியர்வை அப்பிய கொங்கைகளில் இருந்து பால் அருந்தியதால் குழந்தைக்கு இருமல் வந்து விடும். அதற்காக ஒவ்வொரு முறையும் பால் கொடுப்பதற்கு முன் என் மார்புகளை சுடு நீரில் சுத்தப்படுத்துவேன். காய்ச்சல் , சளி வந்து விடக்கூடாதென்று எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் , ஜீஸ் போன்றவற்றைக் கூட அவனுக்காகத் தவிர்த்தேன்.  
  பாரீனில் ப்ரெஸ்ட் பம்பர் மூலமாக மட்டும்தான் குழந்தைக்கு பால் ஊட்டுவார்களாம். அதில் என்ன சுக அனுபவம் இருக்கப் போகிறது. குழந்தை
பால் குடித்து முடித்ததும் உடம்பில் ஒரு வெற்றிடம் உண்டானதைப் போல் ஒரு உணர்வு ஏற்படும். அந்த இன்பமான தருணத்திற்கு இணை பம்பில் கிடைக்குமா?
பாலூட்ட வசதியாக இருக்குமென்று கடன் வாங்கிக் கூட முன்னால் பட்டன் வைத்த துணிகளை மட்டுமே வாங்கிக் குவித்தேன்.
ஆறு மாதங்கள் ஆன பிறகு ராஜேஷுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்த சமயம் , பாலூட்டூம்போது மெலிதாக பின் நாளாக நாளாக அழுத்தமாக கடிக்க ஆரம்பித்தான். வலி தாங்க இயலாது துடித்தாலும் அவன் வேறு உணவு எதையும் உண்ண மாட்டானே என்பதால் பொறுத்துக் கொண்டு ஊட்டுவேன்.


சடாலென கதவைத் திறந்து ராஜேஷ் நுழைந்தான்.  எரிச்சலுடன் என்னைப் பார்த்து “ அதான் ஆஸ்பத்திரிக்கு போகணும்னு சொன்னேனே . ஞாபகம் இல்லை. கிளம்பித் தொலை “ என்றான்.
“ மார்பில் வலி அதிகமாக இருக்குப்பா. அதனால்தான் அதை தடவிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கேன். “
“ அந்த சனியனால்தான் இவ்வளவு பிரச்னையும் . அது இல்லாம இருந்திருக்கலாம் . ச்சே. எனக்கு நிறைய செலவு வச்சிடுச்சு “
வசை பாடிக்கொண்டே கிளம்பினான்.
அவன் இந்த மார்புகளில் இருந்துதான் உயிர் வாழத் தொடங்கினான். விளையாட, தூங்க, ஓய்வு எடுக்க,சாப்பிட, குடிக்கத் தொடங்கினான். அவனது எண்ணற்ற முதல் செயல்கள்  இங்கிருந்துதான் ஆரம்பித்தன.
எட்டு மாதம் வரை அவன் நேசித்த அனுபவித்த அவனுக்கு உலகமாய் இருந்த என் மார்புகள் இன்று புற்று நோயால் தாக்கப்பட்டதால் அதிகம் வெறுக்கப்பட்டதாய் , தேவையற்றதாய் , வெட்டி எறியப்பட வேண்டியதாய் வன்மத்துடன் அவனால் அந்த மார்பகங்கள் பார்க்கப்படுவது எனக்கு துயரம் தருவதாக இருக்கிறது. ஒரு நோய் எப்படி பிரியமான ஒன்றை மிகவும் வெறுக்கத்தக்கதாய் மாற்றுகிறது என்று வியப்பாக இருக்கிறது. நோய் வந்ததால் இந்த மார்புகள் என்ன பாவம் செய்தன ? இப்படி ஏதிலியாய் இடது கைகளால் புறந்தள்ளப்பட்டது ?

சாய்வு நாற்காலியில் இருந்து மருத்துவமனைக்கு கிளம்பத் தொடங்கினேன்.

 
(மஹாஸ்வேதா தேவியின் கதைச் சுருக்கத்தை ஒருவரி மட்டும் படித்த பின் நான் செய்த முயற்சி )


Tuesday, 24 July 2012


நடுத்தீர்ப்பு
------------

இந்திய வரைபடம் போல அவன் சாலையில் பரந்து கிடக்கிறான். அவனது மாணி உடைந்த முட்டையாய் சிதைந்து போய் இருந்தது.மூளை பாதி வெளியில் வந்து மீதி வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. மிக வேகமாக வந்த லாரி அவனை அடித்து விட்டுச் சென்றது. ஓட்டுனர் சிறிது தூரம் சென்று லாரியை நிறுத்தி விட்டு ஓடி விட்டான். சில நிமிடங்களுக்கு முன்தான் “ நான் தம்மடிக்க போறேன். நீ முன்னாடி போ “ என்று இவன் அவனிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. சில நிமிடங்கள் மொத்த வாழ்க்கையை எப்படி திசை திருப்ப முடிகிறது என்பதை இவனால் நம்ப முடியவில்லை. போலீசுக்கு போன் செய்தவனிடம் எதையும் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். நண்பர்கள் அவனைச் சுற்றி அழுது கொண்டிருந்தனர். தூரத்தில் நின்ற லாரியை நோக்கி நடந்தான் இவன். அவனோடு கழித்த பொழுதுகள் பயாஸ்கோப்பில் ஓடத் தொடங்கின.


அப்போது மாலை ஆறு மணி என்பதால் இருட்டத் தொடங்கி விட்டது. வழக்கம் போல இந்த மாட்சிலும் வெங்கட்தான் டாப் ஸ்கோரர்.  வெங்கட் முருகனை சைக்கிளில் முன்னால் உட்கார வைத்து மிதித்தபடி காஞ்சி ரோடிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தான் .

“ டேய். தளபதி எந்த தியேட்டர்ல போடறாங்கன்னு தெரியுமா ? ஃபர்ஸ்ட் ஷோவே பாக்கணும் என்றான்.

“ விபிசி இல்லை பாலசுப்ரமணியா வில் தான் இருக்கும் “ .

“ நாளைன்னிக்கு காந்தி ஜெயந்தி . அன்னைக்கு கீழ்னாத்தூர் டீம் கூட மாட்ச் வச்சிக்கலாம் . சொல்லிடு “

“சரி “

“ இங்கதானே அகதிங்க எல்லாம் இருக்குங்க  ?“

“ ஆமாம். ஏன் ? “

“ நல்ல குஜிலி எதாவது இருக்குமான்னு பாக்கத்தான் “.

ஜீக்கோ என்றொரு பல்லியால் இமைக்க முடியாதாம். எப்போதும் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்குமாம். வெங்கட்டுக்கும் பெண்களைக் கண்டால் அப்படித்தான். புலம் பெயர்ந்தோர் நிறைய பேர் அப்போது குடியேறிக் கொண்டிருந்த காலம். நேரே அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பங்க் கடையில் பாக்கெட் பெப்சியை வாங்கிச் சப்பத் தொடங்கினார்கள் . வெங்கட் 30,000 லென்ஸ்களுள்ள ஒரு தும்பியைப் போல அங்கிருப்பவர்களை பதிவு செய்யத் தொடங்கினான் .

“ முருகா. ஒன்னும் கிடைக்க மாட்டேங்குதே. எல்லாம் தாத்தாவும் பாட்டியுமா இருக்குங்க . ச்சே “

முருகனுக்கு பயமாக இருந்ததால் “ டேய். வாடா. டைமாச்சு “ என்றான்.

வேறு எந்த மரத்தையும் விட ஓக் மரங்களே மின்னல்களால் அதிகம் தாக்கப்படுகின்றன என்ற செய்தி படித்திருக்கிறான். இலங்கைத் தமிழரும் ஓக் மரம் போலத்தான். செல்வந்தர்களாக ஊரில் இருந்தவர்கள் இங்கு வந்து ஒரு சிறிய குடிசையில் கஷ்டப்படுகிறார்களே என்று வருத்தப்பட்டான்.

அப்போது சட்டை பாவாடை அணிந்து ஒரு 15 வயதுப் பெண் ஒருவள் ஒரு பெரியவரிடம் கையினால் சைகை செய்து கிளம்பினாள். கோவிலுக்கு போகிறேன் என்று சொன்னது போல் இருந்தது அது.

எந்தத் தூண்டிலில் மாட்டக் கூடாதோ அந்த மீன் மிகச் சரியாக அங்கேயே மாட்டிக் கொண்டது.

“ முருகா. உட்கார். கிளம்பலாம் “ என்றான்.

வேகமாக சீறிய சைக்கிள் இடுக்கிப் பிள்ளையார் கோவிலுக்கு முப்பதடி முன்பு நின்றது.

“ டேய். எதுக்குடா இங்க நிக்கற ? “

“ வெடக்கோழி ஒன்னு சிக்கி இருக்கு . விடுவனா ? “

“ டேய். அவங்க பாவம்டா. ஆயிரம் கஷ்டம் அனுபவிச்சி வந்திருக்காங்க  “

“ சும்மா ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாரு. வேலையை கெடுக்காதே “.

முருகனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வீடு இங்கிருந்து 5 கி மீ என்பதால் நடந்து போகவும் முடியாது. அமைதியாக ஒரு புளியமரத்தின் ஓரமாக இருந்த கல்திட்டில் போய் அமர்ந்து கொண்டான்.

அவள் ஜீலை மாதக் காற்றைப் போல வேகமாக வந்துக் கொண்டிருந்தாள். அருகில் நெருங்க நெருங்க முருகனுக்கு இதயம் 80 , 90 என்று அடிக்க ஆரம்பித்தது. வெங்கட் சடாலென அவளை நிறுத்த சடன் பிரேக் போட்ட பஸ் போல பதறினான். மெல்ல பூனையைப் போல் பின்வாங்கி ஒரு புளியமரத்தின் பின் சென்று மறைவாக சொட்டு நீர் பாசனம் செய்தான்.

அவளோ மிரண்டு போய் ஒரு கணம் செய்வதறியாது திகைத்துப் போனாள்.

“ உங்க பெயர் என்னங்க ? உங்க ஊர்ல இப்ப பிரச்னை இல்லையே ? எதாவது உதவி வேணும்னா சொல்லுங்க “ நான் ஈழத்துக்கு சப்போர்டான ஆள்தான் . நீங்க அழகா இருக்கீங்க . எங்க படிக்கிறீங்க? “ என்றான் வெங்கட் .

அந்த பக்கத்திலிருந்து எந்த சலனமும் இல்லை.

“ ஏம்மா. சிரிக்கறதுக்கு 17 தசையை அசைச்சாப் போதுமாம். கோபப்படுவதற்கு 43 தசையை அசைக்கணும். எதுக்கு கஷ்டப்படற ? “ என்றான்.

அவளோ எதுவும் பேசாமல் நகர முயற்சித்தாள். அவள் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கிப் பார்த்தவன் “ உன் பேரு அகிலாவா ? கும்முனுதான் இருக்க “ என்றான். 

“ எனக்கு 9 மில்லிகிராம் நீர்ச்சத்தும் 1 கிராம் புரோட்டினும் தர்றியா ? அதான் மாமன் முத்தா கேக்கறேன் “ என்று அசிங்கமாக சிரித்தான்.

ஆள் அரவமற்ற அந்த இடம் மௌனத்தினை பேசிக் கொண்டிருந்தது . அவள் அவனை எரித்து விடுவது போல் முறைத்து விருட்டென நகர மிதிபட்ட நாகம் போல சீற்றமடைந்தான் வெங்கட். வேகமாக அவளை நெருங்கி அவள் இரு மார்புகளையும் முதலை உணவை கவ்வுவது போல இறுக்கிப் பிசைந்தான். வலியால் துடித்தாள்.

வெங்கட் ஆறு அடி இரண்டு அங்குலம் . 65 கிலோ இருப்பான். அவளோ மிஞ்சிப் போனால் 40 கிலோ கூட இருக்க மாட்டாள்.
தட்டிய அவள் கைகளை பிடித்து முறித்தான். வலி தாளாமல் அவள் “ ஊ “ என்று சப்தமிட்டாள் .

“ ஊமை நாயே . என்ன திமிருடி உனக்கு. ராஜீவ் காந்திய கொன்னுட்டு இங்க எதுக்குடி வந்திருக்க ? “ என்றவன் அவள் பின்புறமாக கட்டிக் கொண்டு அவள் சட்டைக்குள் தன் கைகளை நுழைத்தான். அழுது கொண்டே இருந்தவள் அவன் விரல்களின் அழுத்தத்தால் “ ஆ! ஓ ! “ என்று கதறினாள். “ கிள்ளுனா வலிக்குதா ? “ என்று கிண்டலாகக் கேட்டான்.புல்டோசரில் சிக்கிக் கொண்ட மல்லிப் பூவானது அவள் நிலை.

எட்டிப் பார்த்து பதறிய முருகன் அவசரமாக ஓடி வந்து வெங்கட்டைப் பார்த்துக் கெஞ்ச ஆரம்பித்தான்.

“ டேய். ப்ளீஸ். வேணாம்டா . தயவு செய்து விட்டுடா “

“ அரை கிலோ தேன் எடுக்க 20 லட்சம் பூக்களிடம் தேனை எடுக்க வேண்டுமாம். இவ மட்டும் என்ன சுலபமா மடங்கிடுவாளா ? என்றான்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன் “ போடி நாயே உன்னால என் – மயிரைக் கூட தொட முடியாது “ என்றான்.

அணை உடைந்து கிளம்பியது நீர் அவள் கண்களில் இருந்து. அவசரமாக தன் வீடு இருக்கும் பகுதி நோக்கி ஓடினாள் உயிர் பிழைக்க ஓடும் மானைப் போல.

“ டேய் . ஏண்டா இப்படி பண்ண ?

“ மச்சி. சூப்பர்ரா. எப்படி இருந்திச்சி தெரியுமா ? அய்யோ. அவளை பார்த்தா அடுத்த தடவை அவளைப் பார்த்தா தூக்கிட்டு போக வேண்டியதுதான் “.


முருகன் லாரியை நெருங்கி பார்த்தான். பின் டயர் தனது உடலெங்கும் குருதியைப் பூசிக் கொண்டு நின்றது. இடுக்குப் பிள்ளையார் கோவிலை ஒட்டி நின்றிருந்த வண்டியை சற்றுத் தொலைவில் உள்ள கல்திட்டில் போய் அமர்ந்தான். போலீஸ் வந்ததும் அவர்களிடம் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான் முருகன.  
போலிஸ் A4   காகிதத்தில் எழுத ஆரம்பித்தனர்.

“ செப்டம்பர் 30 , 199 ----.செத்துப் பொனது யாரு உன் ஃப்ரெண்டா ?
 அவன் பேர் என்ன ?

“ ஃப்ரெண்டுதான் சார். அவன் பேரு வெங்கடேசன் “

“ லாரி பேரு என்ன போட்டுருக்கு பாரு ? “

“ அகிலான்னு போட்டுருக்கு சார்.

Monday, 20 June 2011

குவியமில்லா ஒரு காட்சிப் பேழை


நுங்கம்பாக்கம் பகுதியின் நெற்றிபொட்டில் இருக்கும் அந்த சிறிய  பூங்கா ( சுதந்திர தின நாள் பூங்கா )  மிகப் பிரசித்தம். நத்தையின் ஓட்டினைப் போல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் நடை பயிற்சி , இரண்டாவதில் ஓட்டப் பயிற்சி , மூன்றாவதில்  குழந்தைகள் விளையாடவும் பெரியவர்கள் உடற்பயிற்சி எடுக்கவும் வடிவமைக்கப் பட்டிருக்கும். இலக்கிய ஆட்களும் அதிகம் வருவதால் விவாத அரங்கமாகவும் பயன்படுகிறது. கோட்டைமேடு கோபால் அடிக்கடி இங்கே வருவார். பழகுவதற்கு இனிமையான பந்தா இல்லாத மனிதர். நிறைய மரங்களால் சூழப்பட்டாலும் வடக்கு மூலையில் உள்ள ஆலமரம்தான் அனைவருக்கும் பிடித்த இடம். அதன்  விழுதுகளில் சிறார்கள் சிலந்தி மனிதனின் சாகசத்தை பயிற்சி எடுக்க முனைவார்கள். 

நான் என் பையனோடு மட்டை ஆட்டம் விளையாட அடிக்கடி வருவேன். இருக்கும் முக்கால் மணி நேரத்தில் ஊஞ்சல், நடை பயிற்சி , மட்டை ஆட்டம் என்று பிரித்துக் கொள்வேன். மூன்று அடுக்கு மனிதர்களும்  இங்கு தத்தம் சீருடையில் தனித்தனியே பிரிந்து தங்கள் பணியைச் செய்வர். ஒரு சனியன்று என் மனைவி , பையனோடு விளையாட வந்தேன். அவள் வேடிக்கை மட்டும்.  நாங்கள் விளையாடி சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அந்த அழுக்குச் சட்டையோடு    
கிழிந்த டிராயர் அணிந்த பையன் வந்தான். பக்கத்தில் வந்ததும் லேசான நாற்றம் அடித்தது. குளிக்கவில்லையோ என்னமோ. அந்தச் சிறுவன் தயங்கி தயங்கி வந்து  " சார். நானும் கூட விளையாடாலாமா ? " என்று கேட்டான்  . ஏற்கனவே  அவனைப் பார்த்து முகம் சுளித்த என் மனைவி அவசரமாக " இல்லை. இல்லை . நாங்க கிளம்பணும் " என்று தவிர்த்து கிளம்பினாள். சற்றே என் பார்வையை அவன் பக்கம் திருப்பினேன். ஏக்கத்தோடு நோக்கிய அவன் பார்வையை சமாளிக்க முடியாமல் கிளம்பினேன்.   

அதன் பிறகு அவ்வப்போது அவனை கவனிக்க ஆரம்பித்தேன் . இதற்கு முன்னரும் அவனை நான் பார்த்து  இருக்கலாம்.  ஞாபகம் இல்லை.  கவனித்த போது அவன் தனியாகவே வருகிறான். அவன் ஒவ்வொரு குழந்தையிடமும் தன்னையும் சேர்த்துக் கொள்ள கெஞ்சுகிறான். சிலர் தூரமாக நின்று விளையாட சிலர் இடது கையால் புறந் தள்ளுகிறார்கள். கூட்டுச் சேர்த்தலின் சந்தோஷத்தையும் நிராகரிப்பின்  வலியையும் அவன் ஒரே சீராக எடுத்துக் கொள்வதைப் பார்த்து சற்று வியந்தேன். அவன் வயது ஆறு (அ)  ஏழு இருக்கும். எங்கள் சிறு பிராயத்தில் தெருவில் ஆறு வகுப்பில் பத்து என்று நண்பர்கள் குவிந்து இருப்பர். எழுத்தாளர் மரியா அண்ணனோடு பேசுகையில் அவர் சொன்னது நினைவுக்கு வந்தது . இப்போதுள்ள குழந்தைகளுக்கு கணிணி தான் நண்பன். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் அதிகம் மனிதர்களோடு பழகுவதில்லை என்று தெரியவில்லை. மாறி வரும் சூழலா அல்லது பெற்றோரா தெரியவில்லை. எதுவானாலும் அது நல்லதற்கல்ல என்பது மட்டும் தெரிகிறது. 

ஒரு ஞாயிறன்று பையனோடு பூங்கா சென்றேன். சில நேர மட்டை ஆட்டத்திற்கு பின் அந்தப் பையன் மெல்ல வந்து நானும் வரட்டா என்று  கெஞ்ச  நான் என் பையனிடம் " நவீன். அண்ணனோடு  விளையாடு . நான் ரெண்டு ரவுண்டு ஓடி விட்டு வருகிறேன் " என்று சொல்லி ஓடத் துவங்கினேன். அந்தப் பையனிடம் " நீ கொஞ்சம் தோற்பது போல் நடி. இல்லாவிட்டால் ஒழுங்காக விளையாட மாட்டான் " என்று   சொல்லிவிட்டு கிளம்பினேன்.   முதலில் வெறுப்போடு விளையாடிய நவீன் பிறகு அந்தப் பையனின் சாதுர்யத்தால் கூச்சலோடு ஆடிக் களித்தான். சிறிது நேரம் கழித்து நான் அந்த பையனிடம் " இவனோடு விளையாட வேண்டும் என்றால் நாம் தோற்றாக  வேண்டும். நீ விட்டுக் கொடுத்து  விளையாடுவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது தம்பி. உன் பெயர் என்ன ?  உங்க வீடு எங்கே ? " என்று கேட்டேன். அதற்கு அவன் " மணி சார். வீடு இங்கதான் சார். பக்கத்துல " என்றான்.  நடையைக் கிளப்பினோம்.  

சில நாட்கள் கழித்து காலை ஐந்தரை ஆறு மணிக்கு குளக் கரை சாலை வழியாக வண்டியில் பூங்கா நோக்கி விரைந்தேன். மெல்லிய காற்று வருட முகத்தில் விழுந்த முடியை பின்னுக்கு தள்ளி சுற்றும் முற்றும்  பார்த்துக் கொண்டு போகையில் அந்த நடை பாதையில் ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்ல கடந்து செல்லும் போது  சற்றென்று வேகம் குறைத்து அந்த சிறுவன் முகத்தைப் பார்க்கையில் ஒரு நிமிடம் எரிமலையோடு பூகம்பம் தாக்கிய நகரைப் போல முற்றிலும் சிதைந்துப் போனேன்.  அந்தச் சிறுவன் மணி , அய்யோ. இயற்கை ஏன் தனது கொடூரத் திரையை எனக்கு விலக்கி காட்டுகிறது ?  துண்டு துண்டாக என்னை ஏன் உடைத்துப்  போடுகிறது ? 

பூங்காவிற்குள்  தோய்ந்த முகத்தோடு ஓடத் தொடங்கினேன். பீஷ்மரின் மீது வீசப்படும் அம்புகள் போல கேள்விகள் என்னைத் துளைக்க ஆரம்பித்தன.   

1 .  மழை பெய்யும் போது அவர்கள் எங்கே தூங்குவார்கள் ? 
2 . அவன் படிப்பானா ?  மாட்டானா ? 
3 .  அடுத்த வருடம் அவன் அப்பா அவனை ஒரு குடிசையிலாவது தங்க வைப்பாரா மாட்டாரா ?  
4 . அவனுக்கு உதவி செய்யலாமா ? 
5 .   சாப்பாட்டிற்கு என்ன செய்வான் ? 
  
குழப்பமாக ஓடி ஓய்வு எடுக்க அந்த ஆலமரத்திற்கு பக்கத்தில் உள்ள திட்டில் உட்கார்ந்தேன். அருகில் கவிஞர்கள் கத்திக்  கண்ணன் மற்றும் போ. ஐயப்பன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப்    பார்த்து " எப்படி இருக்கீங்க? " என்று கேட்க " உங்க கவிதைகளைப் போல ஒரே குழப்பமாக இருக்கேன். கொஞ்சம் என்னைப் போன்ற பாமரனுக்கு புரிகிறார் போல் எழுதுங்களேன். தெளிவாகிடுவோம்ல " என்றேன் . கண்ணன் "  ஏன்பா . இன்னைக்கு வேற யாரும் கிடைக்கவில்லையா ? " என்று கூற இன்னமும் என் குரங்கு மனம் வேறு எங்கும் தாவாமல் ஈட்டியாய் ஒரே இடத்தில் நிலை  கொண்டு மணியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.     

Sunday, 15 May 2011

நேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி ?



பொதுவாக நமக்கு நேர்முகத் தேர்வு என்றாலே மிகுந்த பயம் உண்டாகும். ஆங்கிலத்தில் பத்து P 's என்பார்கள். அது
Poor Preparation Produces Poor Presentation
Poor Presentation Produces Poor Results .
நேர்முகத் தேர்விற்கு முன் முன்னேற்பாடு  மிக அவசியம். வெளிர் சட்டை , உறுத்தாத நறுமணம் , ஒழுங்காக சீவப்பட்ட தலை முடி போன்றவை முக்கியம் என்றாலும் இவை மட்டும் போதாது.வேறு சில காரணிகளும் உண்டு.
1 . உங்கள் உடல் மொழி மிக்க அவசியம். நம்பிக்கையான சீரான (சுறுசுறுப்பான) நடை, உறுதியான நிதானமான பேச்சு  வசியப்படுத்தும். கண்களை மட்டுமே பார்த்து பேச வேண்டும்.
2 . உங்களை நேர்முகத்திற்கு அழைத்திருக்கும் நிறுவனம் பற்றிய செய்திகள், என்ன தயாரிக்கின்றனர் , என்ன பின் புலம், முக்கியப் பொறுப்பு வகிப்போர், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நேர்முகத்தில் அவர்கள் நிறுவனம் பற்றி பெருமளவு
தெரிந்ததாக காட்டிக் கொண்டால் நம்மை கவனிப்பர்.
3 . அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் போட்டியாளர்கள் யார், சந்தையில் இவர்கள் பங்கு எவ்வளவு , இவர்களுடைய முக்கிய வாடிக்கையாளர்கள் யார் , இவர்கள் பொருட்களின் விலை / தரம் என்ன போன்றவை தெரிந்து இருந்தால் நல்லது.

4. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் செய்த சாதனைகள், முதன் முதலாய் பெற்ற பெரிய ஆர்டர், அதை பெறச்  செய்த உழைப்பு, எடுத்த ரிஸ்க்குகள், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்தது, சக பணியாளரை ஊக்குவித்தல் (நீங்கள் செய்திராவிட்டால் கூட செய்ததாகச் சொல்ல வேண்டும்) போன்றவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டும்.
5. எதற்காக எங்களிடம் வேலைக்கு வருகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் திருப்தி அடையும் வகையில் பதில் அளிக்க வேண்டும். பெரிய நிறுவனமான உங்களிடம் சேர்ந்தால் என் திறமை இன்னும் வலுப் பெறும். அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்  என்று சொல்வது பல பதில்களில் ஒன்று.
6. மேலும் நேர்முகத் தேர்வில் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்கும் போது பெரும்பாலும் ஏழை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்ததாகச் சொன்னால் அது சில மதிப்பெண்களைக் கூட்டும். பணி செய்யும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்து வருவதாக சொன்னால் மதிப்பெண்கள் குறையும்.
7. எவ்வளவு காலம் எங்களோடு பணி புரிவீர்கள் என்ற கேள்விக்கு காலம் முழுக்க என்று சொன்னால் நிச்சயம் கிடைக்காது. இவன் பொய் சொல்கிறான் என்று தெரிந்து விடும். அதனால் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு வருடம் இருப்பேன். பிடித்துப் போனால் இன்னும் பல வருடம் இருப்பேன் என்று சொன்னால் நம்புவார்கள்.
8. அதே போல நேர்முகத் தேர்வு நடத்துபவரிடம் நான் என் தனிப்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டே இங்கு  வந்துள்ளேன். நிறுவனம் வளரும்போது கட்டாயம் நானும் வளர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அது மதிப்பெண்களைக் கூட்டும்.
9. அதே போல அவர்கள் மேற்கோள்கள் (reference)  கேட்கும் போது நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணும் சக ஊழியர் தொலைபேசி எண்ணைத் தர வேண்டும். உயர் அதிகாரியோ அல்லது பிடிக்காதவர் எண்ணையோ தந்தால் அது நமக்கு ஆபத்தாக முடிந்து விடும். நம்மிடம் நன்றாகப் பழகுகின்ற வாடிக்கையாளர் எண்ணைக் கூடத் தரலாம். ஆனால் அவரிடம் முன்பே சொல்லி விட வேண்டும் நம்மைப் பற்றி நன்றாகச் சொல்ல.
10. பொதுவாக இண்டஸ்ட்ரீயில் நடக்கும் மாறுதல்கள் , முன்னேற்றங்கள் போன்ற விடயங்கள் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதனை நேர் முகத் தேர்வு நடக்கும் போது சொல்லவேண்டும். மேலும் பொது அறிவு (அரசியல், விளையாட்டு) போன்ற விடயங்களில் நம் அறிவை அவர்களுக்கு தெரியப் படுத்தவேண்டும். அவர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால் அவர் மாநிலத்தின் பெருமைகளை / நல்ல விடயங்களை  பேசினால் அவர் ஈர்க்கக் கூடும். 
பதட்டப் படாமல் கூலாக சென்று (வந்தால் மலை. இல்லையென்றால் ----- என்ற மனப் பாங்கோடு) மேற் கூறியவை செய்தால்  நேர்முகத் தேர்வில் வெற்றி நிச்சயம்.

Saturday, 14 May 2011

ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெய்டபூரில் 9,900 MW  அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் அமைக்கப்படும்  Evolutionary Pressurized Reactors (EPR ) இதுவரை  உலகில் வேறு எங்கும் பயன்படுத்தியது  இல்லை ( not commissioned yet ) . அதனால் இது செயல்படும்போது  ஏற்படும்  பிரச்னைகளை இதை வடிவமைத்து தரும் AREVA விற்கே முழுமையாக தெரியாதபோதும், இந்த Reactorகளின்  நம்பகத் தன்மையும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கும்போது அரசு எப்படி ஒப்புக் கொண்டது என்பது ஆச்சர்யமாக உள்ளது .
ஒரு லட்சம் கோடி செலவு திட்டத்தை எந்த மாதிரி இடத்தில் தொடங்கப் போகிறார்கள் தெரியுமா? SEISMIC ZONE 3 நிலையில் உள்ள 1985 முதல் 2005  வரை  சுமார் 92 சிறிய நில நடுக்கங்களைக் கண்ட இடத்தில். அதிகபட்சமாக 1993ல் ரிக்டர் 6 .2 பதிவாகி உள்ளது.  நில நடுக்கங்களை சமாளிக்கும் திறன் கொண்ட அதிக பாதுகாப்பு வசதி கொண்ட அணு மின் நிலையங்கள் அமைத்த  ஜப்பானே புகுஷிமாவில் தடுமாறும்போது நாம் எந்த நம்பிக்கையில் இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவோம் அதுவும் நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் ?
மேலும் இந்தியா சொந்தமாகவே 18 PHWR களை (pressurised heavy water reactor) தயாரித்து அதை வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் PHWR முறையில் தயாரிக்காமல் புதிய முறையான EPR முறையில் தயாரிக்க வேண்டும் ? மேலும் 1 MWe க்கு EPR  முறையில் இருபது ௦ கோடி செலவாகும். ஆனால் PHWR முறையிலோ 1 MWeக்கு எட்டு கோடிதான் செலவாகும்.  எதற்கு அரசாங்கம் அதிக செலவில் ரிஸ்க் எடுக்கிறது ?
எனினும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளான கொங்கன் பசாவ் சமிதி மற்றும் ஜனஹிட் சேவா சமிதி முதலியன இத்திட்டத்தை எதிர்த்து போராடுகின்றன. வழக்கம்  போல மகாராஷ்டிரா முதல்வரும் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சரும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று சூளுரைத்துள்ளனர்.
மொத்தமுள்ள 2400 குடும்பங்களில்  வெறும் 154 குடும்பங்கள் மட்டுமே இதுவரை நிலத்தை ஒப்படைத்து விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு BNP பரிபாஸ் மற்றும் HSBC வங்கிகள் பெருமளவு நிதி தர சம்மதித்துள்ளன.  அந்த வங்கிகள் இந்த திட்டத்திற்கு பணம் கொடுக்க கூடாது என்று GREEN PEACE என்ற அமைப்பு  கையெழுத்து  இயக்கம் ஆரம்பித்துள்ளனர்.     நீங்களும் அதில் பங்கு பெறுங்கள்.
இதற்கு பதிலாக சூரிய ஒளி மற்றும் BIOMASS போன்ற ஆபத்தற்ற மின் உற்பத்தி திட்டங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் தரலாமே.
மிகுந்த ஆபத்தினை உடைய அணு மின் திட்டங்களை செயல்படுவதில் இந்த அரசு காட்டும் ஆர்வம் மக்கள் நலம் பற்றிய எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை என்பது வெளிப்படுத்துகிறது. 

Friday, 29 April 2011

பாவப்பட்ட மனிதர்












இந்த பாவப்பட்ட மனிதரைக் காப்பாற்ற வக்கில்லாத துப்பில்லாத மத்திய 
மாநில அரசுகள் முறையே சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரையும் 2G இல் ஊழல் செய்தவர்களையும் காப்பாற்ற துடிப்பதைப் பார்க்கும்போது வாயில் இருந்து வெளி வரும் இரு விஷயங்களில் ஒன்றை பொது வெளி காரணமாக அடக்கி இன்னொன்றை வெளியிடுகிறேன். அடத் தூ தூ .







Wednesday, 30 March 2011

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள்


சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கவும் பொது மக்களுக்கு உதவவும் சில முக்கிய மாநகர்களில் கொண்டு வரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில் திட்டம்.
சென்னையில் இரு பாதைகளில், வண்ணாரப்பேட்டைலிருந்து ப்ராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியே சென்னை விமான நிலையத்திற்கும் (23.1 கிமீ) மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை ( 22 கி மீ) இரண்டுமே தலா 18 நிலையங்கள் உள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் Rs .16000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதில் 41 % தொகையை மத்திய மாநில அரசுகளும் மீதியை Japan International Cooperation Agency (JICA) இடம் கடன் பெற்று செலவழிக்கப் போகின்றன.
இதில் வன்னாரப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை வரை தரைக்கு கீழேயும் பிறகு விமான நிலையம் வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை தரைக்கு கீழேயும் பிறகு பரங்கிமலை வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்க வழியை தரைக்கு சுமார் 12 மீ. க்கு கீழே வரும்படி அமைக்கப் போகிறார்கள். 4 கார் (1038 பிரயாணிகள்) மற்றும் சில வருடம் கழித்து 6 கார் (1580 பிரயாணிகள்) தொடர் வண்டிகள் இதில் பயன்படுத்தப்படும்.
இந்த தடங்களில் 2016 ஆம் ஆண்டு தினமும் 7,56 ,466 பேரும் 2026 ஆம் ஆண்டு தினமும் 10,64 ,048 பேர்களும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணசீட்டாக ஸ்மார்ட்கார்டும், தரைக்கு கீழ் உள்ள நிலையங்கள் முழுதும் குளிரூடப்பட்டவைகளாக இருக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளது . தொடர் வண்டிகள் சுமார் 80 கிமீ வேகத்தில் செல்லும். காலை ஐந்தில் இருந்து நள்ளிரவு 12 வரை இதனை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
முதல் 2 கிமீ வரை Rs .8 ல் ஆரம்பித்து அதிகபட்சமாக Rs .23 வரை பயணத் தொகையாக நிர்ணயம் செய்துள்ளனர். சுரங்க வழிகளில், பயணசீட்டில் விளம்பரங்கள் மற்றும் வண்டி நிறுத்துமிடம் மூலம் பணம் திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.
நாமும் ஒரு புதிய பயணத்திற்கு தயாராவோம்.