Wednesday 9 January 2013

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை - 1

கடந்து சென்ற 
அந்த உதவுகை ஊர்தியில் 
இருப்பவருக்காக 
சில மணித்துளிகள் 
கண் மூடி பிரார்த்தித்த
அந்த சிறுவனின் 
காலில் விழத் துடித்தது 
மனசு

---------------------------------------------------------------------------------


முட்கள் 
ஆவலோடு 
நகர்கின்றன
எந்த 
மணித்துளி 
வரலாறாய் 
மாறப் போகிறது ?



---------------------------------------------------------------------------------


சாராயம் குடிக்க 
காசு தராததால் 
அம்மிக் குழவி போட்டு 
தலை நசுக்கப்பட்ட 
ஆத்தா நினைத்தாளோ .

நண்பனோடு தெருவில் 
நின்று பேசியதால் 
சந்தேகப்பட்டு விஷம் வைத்து 
சாகடிக்கப்பட்ட 
மனைவி நினைத்தாளோ

ஜாதியை இகழ்ந்ததால்
தலைவெட்டிக்
கொல்லப்பட்ட
நண்பன் நினைத்தானோ

பேருந்தில்
கையில் விலங்கோடு
தும்மிக் கொண்டிருந்த
அந்த கைதியை .

யார் நினைத்திருப்பார் ?



---------------------------------------------------------------------------------

" என்னவாக விருப்பம் ?"
என்ற டீச்சரின் கேள்விக்கு
" எஞ்சினியர் , டாக்டர் , போலீஸ் " என்று
எதைச் சொல்வது என்று
குழப்பமாக சிந்திக்கும் தருணம்
வரவில்லை -
சிக்னலில் பிச்சை எடுக்கும்
சிறுவனுக்கு.


No comments:

Post a Comment